USA Indian Deported: அமெரிக்காவில் இருந்து 200 இந்தியர்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்டு நாடு கடத்தப்பட்டது நாடாளுமன்றத்திலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்:
அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்றது முதல், டொனால்ட் ட்ரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக சட்டவிரோதமாக மற்றும் உரிய ஆவணங்களின்றி அந்நாட்டில் தங்கியுள்ள மக்கள், நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்காவில் இருந்து ராணுவ விமானம் மூலம் நேற்று நூற்றுக்கணக்கான இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அவர்கள், இந்திய அதிகார்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். அப்போது, நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் சொன்ன தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியர்களுக்கு கை, கால்களில் விலங்கு
அமெரிக்காவில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு இருந்தபோது, அவர்கள் இருட்டு அறையில் அடைக்கப்பட்டு இருந்ததாக இந்தியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், விமானம் ஏறியதில் இருந்து அமிர்தசரஸில் இறங்கும் வரை, தங்களது கை மற்றும் கால்களில் விலங்கு பூட்டப்பட்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். விமானத்தில் ஒட்டுமொத்த பயணிகளுக்கும் ஒரே கழிவறை மட்டுமே ஒதுக்கப்பட்டதாகவும், தங்களை கைதிகளை போன்றே அமெரிக்கா கையாண்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
வெடித்த சர்ச்சை:
இந்தியர்களின் கை, கால்கள் விலங்கிடப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டது தொடர்பான புகைப்படங்கள், தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்திய அரசால் தங்களது குடிமக்களை தாயகம் அழைத்து வர சிறப்பு விமானங்களை கூடவா ஏற்படுத்தி தரமுடியவில்லை? என கேள்வி எழுப்புகின்றனர். மேலும், உலகின் விஷ்வகுருவாக இந்தியாவை உருவாக்கும் மோடி அவர்களே, இந்த சம்பவம் இந்தியர்களுக்கு உலகளவிலான அவமானம் எனவும் சாடியுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் அமளி
இந்தியர்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்டு நாடு கடத்தப்பட்ட விவகாரம், நாடாளுமன்றத்திலும் பூதாகரமாக வெடித்துள்ளது. அமெரிக்க அரசால் இந்தியர்கள் உரிய முறையில் கையாளப்படவில்லை, அவர்களை பாதுகாப்பாக அழைத்து வர மத்திய அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இந்த விவாகரம் தொடர்பாக விவாதிக்கவும் வலியுறுத்தின. இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால், மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அரசு தரப்பில் தற்போது வரை இந்த விவகாரம் தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று உரையாற்ற உள்ள நிலையில், இந்த பிரச்னை வெடித்துள்ளது. இதனிடையே, வரும் 13ம் தேதி அதிபர் ட்ரம்பை, வாஷிங்டன் டிசியில் பிரதமர் மோடி நேரில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.