Operation Sindoor: இந்தியாவின் சிந்தூர் தாக்குதலுக்கு பிரதமர் மோடியை கொண்டாடும் வேளையில், பஹல்காமில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுக்கு தற்போது வரை யாரும் ஏன் பொறுப்பேற்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிந்தூர் - இந்திய ராணுவம் பதிலடி:
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு எல்லையில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. நள்ளிரவில் 24 நிமிடங்கள் நீடித்த இந்த தாக்குதலில் இந்தியா 25 ஏவுகணைகளை ஏவியதாக கூறப்படுகிறது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடைபெற்ற இந்த தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 80 பேர் வரை கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதேநேரம், இந்த தாக்குதலில் தங்கள் நாட்டு அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் குற்றம்சாட்டி வருகிறது. தீவிரவாதிகள் முகாம் மீது மட்டுமே தாக்குதல் நடத்தியாக இந்தியா கூறினாலும், பாகிஸ்தானில் உள்ள வழிபாட்டு தலங்களை இந்திய ஏவுகணைகள் சேதப்படுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாஸ் காட்டிய மோடி.. கொண்டாடும் இந்தியா:
இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் நடத்திய இந்த தாக்குதலை இந்தியர்கள் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். தீவிரவாதிகளுக்கு ”சரியான பதிலடி, ஜெய்ஹிந்த், வந்தே பாரத், பாரத் மாதாகி ஜெய்” என சமூக வலைதளங்களில் ஃபயர் விட்டு வருகின்றனர். குறிப்பாக, ”பிரதமர் மோடியின் ஆலோசனையின் பெயரிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது, சிந்தூர் என்ற உணர்ச்சிகரமான பெயரை மோடி தான் தேர்வு செய்தார், திட்டமிடப்பட்ட தாக்குதலை இரவு முழுவதும் தூங்காமல் கண்விழிந்த்து மோடி கண்காணித்து வந்தார், அடித்தால் வாங்கிக் கொள்ள பழைய இந்தியா கிடையாது, பிரதமர் மோடியின் புதிய இந்தியா” என பாஜகவினர் மற்றும் ஏராளமான ஊடகங்கள் பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளி வருகின்றன. இந்த ஒட்டுமொத்த வெற்றியும் பிரதமர் மோடியையே சாரும் என பாஜகவினர் மார்தட்டி வருகின்றப்னர்.
குறிவைக்கப்பட்ட சுற்றுலா பயணிகள்:
சிந்தூர் எனும் இந்த எல்லை தாண்டிய தாக்குதலின் ஆரம்பப் புள்ளி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தான். காஷ்மீர் பள்ளத்தாக்கில் சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து கடந்த சில தசாப்தங்களில் நடத்தப்பட்ட மிகமோசமான தாக்குதல் இதுவாகும். இந்த தாக்குதலை தொடர்ந்து, ஒட்டுமொத்த மத்திய அரசு இயந்திரமும் வேகம்பெற்றது. பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களுக்கு பிறகு “சிந்தூர்” எனும் தாக்குதல் அரங்கேற்றப்பட்டு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.
கோட்டை விட்டதற்கு யார் பொறுப்பு?
தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்த பெருமை பிரதமர் மோடிக்கே என ஒட்டுமொத்த பாஜகவும் புகழ்பாடி வரும் நிலையில், பஹல்காமில் தீவிரவாதிகள் ஊடுவும் அளவிற்கு பாதுகாப்பில் கோட்டை விட்டதற்கு மட்டும் தற்போது வரை யாருமே பொறுப்பேற்கவில்லை ஏன்? யூனியன் பிரதேசமான ஜம்மு & காஷ்மீரில் பாதுகாப்புத்துறை மத்திய அரசு வசமே உள்ளது. அப்ப்டி இருந்தும் பாதுகாப்பில் கோட்டை விட்டதை பற்றி அரசு எங்குமே விளக்கமளிக்காதது ஏன்? முதல் நாள் முதலே தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி அளிக்கப்படும் என்பதே பிரதமர் மோடி தொடங்கி அனைத்து மத்திய அமைச்சர்களின் கூக்குரலாகவும் உள்ளது. ஆனால், பாதுகாப்பில் நடந்த தவறு என்ன? எப்படி உள்ளே நுழைந்தார்கள், எங்கு குறைபாடு ஏற்பட்டது, அதற்கு யார் காரணம் என எந்த விளக்கமும் இதுவரை இல்லையே. உதாரணமாக, ஒரு ரயில் விபத்து நடந்தால் கூட குறைந்தபட்சம் சில பணியாளர்கள் தான் பொறுப்பு என கூறி, பணியிடை நீக்க எனும் குறைந்தபட்ச நடவடிக்கையாவது எடுக்கப்படும். ஆனால், நாட்டின் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுரு 26 உயிர்களை பறித்ததற்கு யார் பொறுப்பு? என்பது மட்டும் விடையில்லா கேள்வியாகவே தொடர்கிறது.
விடையில்லா கேள்விகள்:
தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்பு தான், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு & காஷ்மீர் சென்று அங்கு தீவிரவாதம் ஒடுக்கப்பட்டுள்ளதாக கர்ஜித்தார். அடுத்த சில நாட்களிலேயே 26 பேர் அங்கு சுட்டுக் கொல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து,
- பாகிஸ்தானை ஒட்டிய மிக முக்கியமான இந்த சுற்றுலா பகுதியில் போதிய பாதுகாப்பு இல்லையா?
- 24 மணி நேரமும் ரோந்து பணி நடைபெறும் போதும் தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவியது எப்படி?
- தாக்குதலுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பே பஹல்காமில் தீவிரவாதிகள் முகாமிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், உளவுத்துறை என்ன தான் செய்து கொண்டு இருந்தது?
- தாக்குதல் நடந்து இத்தனை நாட்களாகியும் அந்த 4 தீவிரவாதிகள் சிக்காதது எப்படி?
- ராணுவமயமாக்கப்பட்ட ஜம்மு & காஷ்மீரில் நூற்றுக்கணக்கானோர் குவிந்திருந்த சுற்றுலா தளத்தில் ஒரு பாதுகாப்பு வீரர் கூட இல்லாதது எப்படி?
- தாக்குதல் குறித்து அறிந்ததும் சவுதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி, பாதிக்கப்பட்டவர்களை கூட பார்க்காமல் பீகாரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டது நியாயமா?
அன்று கர்ஜித்த மோடி:
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீரில் நடந்த ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலுக்கும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நோக்கி கேள்விக் கனைகளை தொடுத்தார். டெல்லியில் உள்ள சக்திகள் நாட்டின் எல்லைகள் மற்றும் நிதி, தகவல் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றின் மீது முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும்போது, தீவிரவாதிகள் எல்லையைக் கடந்து மக்களை எவ்வாறு தங்கள் விருப்பப்படி கொல்ல முடியும் என மத்திய அரசை சாடினார். ஆனால், இன்று பிரதமராக இருக்கும் மோடி தாக்குதலுக்கு பொறுப்பேற்காமல், ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள பீகார் தேர்தலுக்கான மைலேஜ் ஆக அதனை பயன்படுத்த முயல்கிறார் என்பதே இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டாக உள்ளது.