சீனாவிற்கு அமெரிக்கா பதிலடி:


இந்தியாவிற்காக புதியதாக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்க தூதர் எலிசபெத் ஜோன்ஸ், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மிகுந்த திறன்மிக்க நாடாக வளரவேண்டும் என்ற இந்தியாவின் முயற்சிகளை ஆதரிப்பதில் அமெரிக்கா ஆர்வம் காட்டுவதாக கூறினார். மிகவும் முக்கியமான பாதைகளில் இந்தியாவின் திறன் செலுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். இந்தியா உடனான உறவு என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது எனவும், பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய விவகாரங்களில், இருநாடுகளும் இயற்கையாகவே நண்பர்களாக இருப்பதாகவும் கூறினார்.  அமெரிக்கா - இந்தியா கூட்டு பயிற்சி தொடர்பாக சீனாவின் குற்றச்சாட்டிற்கு இந்தியாவின் பதிலை  தான் வரவேற்பதாகவும், சீனாவிற்கு இது வேண்டாத வேலை எனவும்  எலிசபெத் ஜோன்ஸ் கூறியுள்ளார்.


இந்தியா - அமெரிக்கா கூட்டுப்பயிற்சி:


இந்தியா மற்றும் அமெரிக்காவின் 18-வது கூட்டு ராணுவ பயிற்சியான யுத் அப்யாஸ் 2022 என்ற பெயரில் நடைபெறுகிறது. அமெரிக்க ராணுவத்தின் 11-வது வான்படை பிரிவை சேர்ந்த வீரர்களும், இந்திய ராணுவத்தின் அசாம் படை பிரிவினரும் இந்த பயிற்சியில் பங்கேற்கின்றனர். உத்தரகாண்டில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகள் இணைந்து நடத்தும் இந்த கூட்டு ராணுவ பயிற்சிக்கான முகாமானது,  சீன எல்லையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பயிற்சியின்போது,  ரஷ்யாவை சேர்ந்த மி-17வி5 ரக ஹெலிகாப்டரில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் இணைந்து, மிக அதிக உயரத்தில் பறந்து சென்று போர் பயிற்சியில் ஈடுபட்டனர்.


கூட்டுப்பயிற்சியின் நோக்கம்:


இந்த கூட்டு பயிற்சியின்போது மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்படும். இயற்கை சீற்றத்தின் போது, நிவாரண நடவடிக்கைகளை விரைவாகவும், ஒருங்கிணைந்தும் செயல்படுத்துவதற்கான பயிற்சியை இரு நாடுகளும் பெறவுள்ளன. 


சீனா குற்றச்சாட்டு:


இந்தியா, அமெரிக்கா இடையேயான கூட்டு ராணுவ பயிற்சிக்கு சீனா அண்மையில்  தனது எதிர்ப்பை தெரிவித்து இருந்தது. அசல் எல்லை கோட்டுக்கு அருகே நடந்து வரும் இந்த போர் பயிற்சியானது, இந்தியா மற்றும் சீனா இடையே மேற்கொள்ளப்பட்ட எல்லை ஒப்பந்தங்களை மீறும் வகையில் உள்ளது.  சீனா மற்றும் இந்தியா இடையே கடந்த 1993 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மீறும் வகையில், அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான கூட்டுப்பயிற்சி நடைபெற்று வருவதாகவும் சீனா குற்றம்சாட்டியது. 


சீனாவிற்கு இந்தியா பதிலடி:


சீனாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை, அமெரிக்காவுடன் ஆலி பகுதியில் நடந்து வரும் போர் பயிற்சிகளுக்கும், சீனா மற்றும் இந்தியா இடையே கடந்த 1993 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. இந்த ஒப்பந்தங்களை போட்டு விட்டு அவர்களே விதிமீறிய விசயங்களை சீன தரப்பு நினைத்து பார்க்க வேண்டும். யாருடன் பயிற்சி செய்ய வேண்டும் என்பது பற்றி இந்தியா தேர்வு செய்து கொள்ளும். இந்த விவகாரத்தில் இந்தியா, மூன்றாம் தரப்பு நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் எதுவும் அளிக்கவில்லை என பதிலளித்து இருந்தது. இந்தியாவின் இந்த கருத்தை வழிமொழிவதாக அமெரிக்கா தற்போது தெரிவித்துள்ளது.