வேறொரு பெண்ணை கொலை செய்துவிட்டு, தான் இறந்தது போல நாடகம் ஆடிய பெண்ணும் அவரது காதலுரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பின்னர், அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு டிவி ஷோவை பார்த்து இந்த கொலையை திட்டமிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட பெண் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.


சம்பவத்தை விரிவாக விவரித்த காவல்துறை அதிகாரிகள், "கிரேட்டர் நொய்டாவிலிருந்து சுமார் 15 கிமீ தொலைவில் உள்ள பத்புரா கிராமத்தில் வசிக்கும் பாயல் என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட பெண், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் நட்பாக பழகி, தனது காதலர் அஜய் தாக்கூரின் உதவியுடன் அவரைக் கொலை செய்துள்ளார். தனது பெயரில் ஒரு தற்கொலைக் குறிப்பை எழுதி வைத்து, தான் தற்கொலை செய்து கொண்டது போல நாடமாடியுள்ளார். இறந்தவர் கிரேட்டர் நொய்டாவின் கவுர் சிட்டி பகுதியில் உள்ள ஒரு மாலில் பணிபுரிந்தார். அவருக்கு அஜய்யை பற்றி தெரியும்.


பாதிக்கப்பட்ட பெண் பாயலைப் போலவே இருந்திருக்கிறார். எனவே, பயல் இறந்துவிட்டது போல நாடகம் ஆட திட்டமிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை பாயலின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார் அஜய். அங்கு அவரது கழுத்து அறுக்கப்பட்டு, அமிலம் மற்றும் சூடான எண்ணெயைப் பயன்படுத்தி முகம் சிதைக்கப்பட்டது.


அந்த உடல் தன்னுடையதுதான் என்பதை அவரின் குடும்பத்தையே நம்ப வைத்துள்ளார். பின்னர், காதலுடன் தப்பி ஓடியுள்ளார். பாயலின் குடும்பத்தினர் அது அவரது உடல் என்று நம்பி தகனம் செய்தனர்" என தெரிவித்துள்ளனர்.


ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்ததையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. போலீசார் விசாரணை நடத்தி பயல் மற்றும் அஜய் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தாத்ரி காவல் நிலைய அதிகாரிகள் பேசுகையில், "குற்றம் சாட்டப்பட்ட பெண், விசாரணையின் போது குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும், அவர் சில மாதங்களுக்கு முன்பு ஒரு டிவி சீரியலைப் பார்த்துள்ளார்.


அதை பார்த்து, தனது துணையுடன் திட்டம் தீட்டியுள்ளார். முதற்கட்ட விசாரணையில் பாயலின் தந்தை தனது உறவினர்களுக்கு கடன் பாக்கி வைத்திருப்பது தெரியவந்தது. கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால், அவர் துன்புறுத்தப்பட்டார். வேறு வழி இல்லாததால், பயலின் பெற்றோர் இருவரும் தூக்குப்போட்டு தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டனர். அவரது பெற்றோரின் தற்கொலையைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட பாயல், தான் இறந்தது போல நாடமாக முடிவு செய்தார். அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கியையும் கைப்பற்றினோம்" என்றார்கள்.