இந்தியாவில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். இவ்வாறு பயணம் செய்யும் போது சிலர் டிக்கெட் இல்லாமலே வந்து தங்களின் இருக்கைகளில் அமர்ந்து தொந்தரவு செய்வதாக அவ்வப்போது பயணிகள் புகார் அளித்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டாலும் பெரும்பாலானவர்கள் திரும்ப திரும்ப அதே தவறை செய்கின்றனர். இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

Continues below advertisement

இதன்படி ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் மக்கள் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் இரு மடங்கு அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். இதுவரை டிக்கெட் இல்லாமல் ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கு ரயில்வே சட்டத்தின் படி, 250 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில் வரும் ஜூலை 1-ம்தேதி முதல் 500 ரூபாய் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்த உத்தரவை ரயில்வே வாரியம் அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.

Continues below advertisement

எனவே டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்கள் இனி 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். ஒருவேளை பயணிகள் அபராதம் செலுத்த மறுத்தால் வழக்கு நீதிமன்றம் வரை செல்லும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, வேறு ஒருவர் பெயரில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டில் பயணிப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய ரயில்வே எச்சரித்துள்ளது.

அதேபோல் அனுமதி இல்லாமல் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பொருட்களை விற்பனை செய்பவர்கள் அல்லது பயணிகளை பொருட்களை வாங்க தொல்லை செய்பவர்கள் மீதான விதிமுறைகளையும் ரயில்வே நிர்வாகம் கடுமையாக்கியுள்ளது. புதிய விதிகளின்படி, இத்தகைய செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு 2,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்த தவறினால் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது 5,000 ரூபாய் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படலாம். மீண்டும் இக்குற்றத்தைச் செய்பவர்களுக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

அதுமட்டுமின்றி புதிய ரயில்வே விதிகளின்படி, ஒருவர் பெயரில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டில் வேறு ஒருவர் பயணம் செய்வது கண்டிறியப்பட்டால் அந்த பயணியிடம் இருந்து டிக்கெட் கட்டணத்துடன் குறைந்தபட்சம் 500 ரூபாய் கூடுதல் தொகையாக வசூலிக்கப்படும் என்றும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. ஒருவேளை பயணிகள் அபராதம் செலுத்த மறுக்கும் பட்சத்தில் வழக்கு நீதிமன்றம் வரை செல்லும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் சக பயணிகளுக்கு தொந்தரவு தருவது, தவறான வார்த்தைகளை பயன்படுத்துவது, பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளை ஆண்கள் ஆக்கிரமிப்பது ஆகியவற்றுக்கும் 1000 ரூபாய் முதல் அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட உள்ள இந்த புதிய விதிமுறைகள் குறித்த தகவல்களை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தெரிவிக்குமாறு அனைத்து மண்டல ரயில்வேக்களுக்கும் ரயில்வே வாரியத்தின் நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

எனவே ஜூலை 1 முதல் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது, அனுமதி இல்லாமல் பொருட்களை விற்பது, மற்றொருவரின் டிக்கெட்டில் பயணம் செய்வது ஆகியவை கடுமையான அபராதம், நீதிமன்ற வழக்கு, சிறை தண்டனை வரை கூட கொண்டு செல்லும் என்பதால் பயணிகள் கவனமாக இருக்க வேண்டும்.