இந்தியாவில் தொலைக்காட்சி சேனல்களை அப்லிங்க் மற்றும் டவுன்னலிங்க் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் 2022-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு, தொலைக்காட்சி ஒளிபரப்பு வழிகாட்டுதலில் புதிய திருத்தம் வந்துள்ளது. இந்த புதிய வழிகாட்டுதல்களை நேற்று வெளியானது. இத்தகைய உள்ளடகத்தை உருவாக்க சேனல்களுக்கு அவகாசம் வழங்கப்படும் என தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


புதிய அறிவிப்பு


செய்தி மற்றும் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளின் ஒளிபரப்புக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செய்தி மற்றும் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளின் ஒளிபரப்புக்கான வழி காட்டுதல்கள் கடந்த 2011ல் திருத்தப்பட்டன. அதன் பின் தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இதன்படி, நம் நாட்டில் பதிவு செய்யப்பட்ட தொலைக்காட்சி நிறுவனங்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. நேரலை ஒளிபரப்புக்கு முன்னதாக அனுமதி பெற வேண்டிய அவசியம் இனி இல்லை; ஆனால், ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி குறித்து முன்னதாக பதிவு செய்ய வேண்டும். மேலும், தேசிய நலன் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளுக்கு, 30 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட வேண்டும். இதற்காக 8 கருப்பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சேனல்கள் தகவல் உருவாக்கி ஒளிபரப்ப வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.






8 கருப்பொருள்


நாட்டில் பதிவு செய்யப்பட்ட தொலைக்காட்சி நிறுவனங்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப 8 கருப்பொருட்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த 8 தலைப்புகளின் கீழ் தினமும் தகவல்கள் ஒளிபரப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, கல்வி மற்றும் எழுத்தறிவு, விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாடு, உடல்நலம் மற்றும் குடும்ப நலன், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப, பெண்கள் நலன், சமூகத்தின் நலிந்த பிரிவினரின் நலன், சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் பாதுகாப்பு, தேசிய ஒருங்கிணைப்பு ஆகிய தலைப்புகளின் கீழ் தினமும் தகவல்களை ஒளிபரப்ப வேண்டும் என தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளர் ஆபூர்வ சந்திரா கூறியதாவது, ” இந்த புதிய வழிகாட்டுதல்கள் செயல்படுத்தப்பட்டதும் சேனல்கள் கண்காணிக்கப்படும். யாராவது இதை கடைபிடிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்படும். சில சேனல்களை தவிற மற்ற அனைத்து சேனல்களுக்கும் இந்த புதிய வழிகாட்டுதல்கள் பொருந்தும். அதன்படி, விளையாட்டு, வனவிலங்கு மற்றும் வெளிநாட்டு சேனல்களுக்கு விலக்கு அளிக்கப்படும். விளையாட்டு சேனல்களை பொறுத்தவரை, நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் நேரங்களில் விலக்கு அளிக்கப்படும் என தெரிவித்தார். 






மேலும், தொலைக்காட்சி நிறுவனங்கள், ஒளிபரப்பாளர்கள் பிற பங்குதாரர்களுடன் ஆலாசித்த பிறகு தகவல்கள் ஒளிபரப்புவதற்கான நேரம் ஒதுக்கப்படும். இதை ஒரே மாதிரியாக செயல்படுத்துவதற்கான தேதியும் விரைவில் முடிவு செய்யப்படும் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளர் ஆபூர்வ சந்திரா தெரிவித்தார்.