முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் படத்தை தனது வாட்ஸ்அப்  ப்ரொபைல் படமாக பயன்படுத்தியதாகக் கூறி, நவி மும்பையை சேர்ந்த இளைஞரை காவல்துறை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்து அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஔரங்கசீப் புகைப்படத்தை ப்ரொபைல் பிச்சராக வைத்ததால் சர்ச்சை:


இதை தொடர்ந்து, வாஷியில் மொபைல் சேவை வழங்குநரின் விற்பனை நிலையத்தில் பணிபுரியும் இளைஞரை காவல்துறை கைது செய்தது. பின்னர், அவருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில், விடுதலை செய்யப்பட்டார். வாட்ஸ்அப் ப்ரொபைல் படமாக ஔரங்கசீப் வைக்கப்பட்ட ஸ்கிரீன் ஷாட்டை இந்து அமைப்பினர் காவல்துறையிடம் சமர்ப்பித்துள்ளனர்.


அதன் அடிப்படையில், மத உணர்வுகளை புண்படுத்தியது, இரு பிரிவினர் இடையே பகைமையை தூண்டியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சமீபத்தில், மகாராஷ்ரா மாநிலம் கோலாப்பூர் சிவாஜி பூங்கா அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து அமைப்பினர் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் குதித்தனர். 


ஆனால் இந்த கூட்டத்திற்கு போலீசார் மறுப்பு தெரிவித்தனர். அதையும் மீறி ஒன்று திரண்டு போராட்டத்தில் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து போலீசார் கூட்டத்தை கலைக்க சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது அவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு தடியடி நடத்தப்பட்டது. 


தொடரும் பதற்றம்:


இதனை அடுத்து, போலீசாருக்கு இந்து அமைப்பினருக்கு மோதல் வெடித்தது. பின்னர், போலீசார் மீது இந்து அமைப்பினர் கற்களை வீசியும், கட்டைகளை எரிந்தும் சண்டையில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த கடைகளையும், வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பதற்றம் நிலவியது.


கோலாப்பூரி அவுரங்கசீப் மற்றும் திப்பு சுல்தானை புகழ்ந்து வாட்ஸ் அப் உள்ளிட்ட மற்ற சமூக வலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பதிவிட்டிருந்தனர். அதில் அவுரங்கசீப் மற்றும் திப்பு சுல்தானை பாராட்டக்கூடிய வகையில் போஸ்டர்களும், வசனங்களும் இடம் பெற்றிருந்தன.  


6 பேர் மீது வழக்குப்பதிவு:


அவுரங்கசீப், திப்புசுல்தான் உள்ளிட்டோரை புகழ்ந்து தள்ளியதற்கு எதிராக இந்து அமைப்பினர் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதில் தான் அங்கு பெரும் மோதல் வெடித்தது. இதனால் போலீசார் கோலாப்பூர் பகுதியில் ஊரடங்கு பிறப்பித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


இந்த சம்பவம் குறித்து மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது, ”மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவது அரசின் கடமை. அமைதியாக இருக்க வேண்டும் என்று மக்களுக்கு கோரிக்கை விடுகிறேன். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.