தேசிய ஒற்றுமை தினம் அல்லது ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31 அன்று அனுசரிக்கப்படுகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 550க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைப்பதற்கான அவரது முயற்சிகளுக்காக படேல் 'இந்தியாவின் இரும்பு மனிதர்' என்றும் அழைக்கப்படுகிறார். இந்த ஆண்டு சர்தார் வல்லபாய் படேலின் 147வது ஆண்டு நினைவு தினம் கொண்டாடப்படுகிறது.


தேசிய ஒற்றுமை தினம் 2022 வரலாறு
இந்த நாள் முதன்முதலில் 2014 இல் கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி 2014 இல் படேலின் பிறந்த நாளை தேசிய ஒற்றுமை தினமாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்தார். ஒன்றாக இருப்பதன் வலிமையை மக்களுக்கு உணர்த்துவதே தேசிய ஒற்றுமை தினத்தின் பின்னணியில் உள்ள காரணமாகும்.




தேசிய ஒற்றுமை தினம் 2022 முக்கியத்துவம்


நாட்டின் ஒற்றுமையை உயர்த்துவதும், வல்லபாய் படேலின் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை பரப்புவதும் இந்த நாளின் நோக்கமாகும். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்தி, தேசத்தின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்த இந்த நாள் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.


தேசிய ஒற்றுமை தினம் நாடு முழுவதும் பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது.
தேசிய ஒற்றுமை தினமான இன்று, சர்தார் வல்லபாய் படேலுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலை முன்பான தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.


ஒற்றுமையின் சிலை - Statue of Unity
ஒற்றுமை சிலை படேலுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது 2018 இல் திறக்கப்பட்டது. இது 182 மீட்டர் உயரம் கொண்ட உலகின் மிக உயரமான ஒற்றுமை சிலை ஆகும். இந்த சிலை இந்தியாவின் தேசிய, ஆன்மீக, வரலாற்று மற்றும் கல்வியின் மதிப்பை குறிக்கிறது.


இதற்கிடையே இந்தியாவின் இரும்பு மனிதர் எனப் போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான இன்று தேசிய ஒற்றுமை தினமாக நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மயிலாடுதுறையில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா- சாய்) ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்க மைதானத்திலிருந்து ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றது.


மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரமணிமாறன், சாய் விளையாட்டு அரங்க பொறுப்பாளர் தனலட்சுமி ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஒற்றுமை ஓட்டமானது, விளையாட்டு மைதானத்தில் தொடங்கி, மகாதானத் தெரு, பட்டமங்கலத் தெரு, கச்சேரி சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் துவங்கி இடத்திலேயே முடிவடைந்தது. இதில் சாய் விளையாட்டு அரங்க  மாணவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.