அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடிபிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக, மத்தியில் ஆட்சியில் செய்து வரும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சியும் சில மாநில கட்சிகளும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.


பாஜக எதிர்ப்பு:


ஆனால், முக்கிய தலைவர்கள் சிலர் பாஜக, காங்கிரஸ் என இரண்டு கட்சிகளையும் ஒரே அளவில் எதிர்த்து வருகின்றனர். இது பாஜகவை வெற்றி பெறவே வைக்கும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என அரசியல் வல்லுநர்கள் கருதி வருகின்றனர்.


மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் ஆகிய தலைவர்கள், பாஜகவை வீழ்த்துவதில் முனைப்பாக இருந்தபோதிலும், காங்கிரஸ் கட்சியை ஒரு சேர எதிர்த்து வருகின்றனர்.


சமூக நீதி கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு:


இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கப்பட்ட அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு இன்று டெல்லியில் தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் ஸ்டாலின் தலைமை உரை ஆற்றுகிறார்.


இந்த மாநாட்டின் கருப்பொருளாக, "சமூக நீதி போராட்டத்தை முன்னோக்கி எடுத்து செல்வது மற்றும் சமூக நீதி இயக்கத்தின் தேசிய திட்டத்தில் இணைவது" என்ற தலைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.  


இந்த தேசிய மாநாட்டில், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
பொதுச்செயலாளர் டி ராஜா, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் உள்ளிட்டோர் இணையம் வழியாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.


திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையன், தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ சகன் சந்திரகாந்த் புஜ்பால், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் மனோஜ் குமார் ஜா, எம்பி முகமது பஷீர், பாரத் ராஷ்டிர சமிதி எம்பி கேசவ ராவ், மகாராஷ்டிரா எம்எல்சி மகாதேவ் ஜாங்கர், எம்பி நபர் குமார் சரணியா, முன்னாள் எம்பி ராஜ்குமார் சைனி உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, திராவிடர் கழக தலைவர் வீரமணி உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.