ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நேற்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யபட்டது. நிதித்துறையை கவனித்து வரும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய சட்டப்பேரவைக்கு தயாராக வந்தார்.


ஆனால், அவர் பட்ஜெட்டை வாசித்த சில நிமிடங்களில் அனைவரும் குழம்பினர். ஏனென்றால், அவர் கடந்தாண்டு பட்ஜெட்டை சட்டசபையில் வாசித்தார்.  பின்னர், தலைமை கொறடா இடைமறித்து, பட்ஜெட் உரையை தாக்கல் செய்வதை தடுத்து நிறுத்தினார். இந்த சம்பவத்திற்கு விளக்கம் அளித்த கெலாட், தான் வருந்துவதாகவும் நடந்தது தவறு என்றும் கூறினார்.


இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இந்த விவகாரத்தை முன்வைத்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் கட்சியையும் ராஜஸ்தான் முதலமைச்சர் கெலாட்டையும் கடுமையாக சாடி பேசினார்.


நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் குறித்த விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர், காங்கிரஸ் முன்வைத்த ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்தார். வாயை டெட்டால் போட்டு கழுவும்படி கூறிய அவர், "ராஜஸ்தானில் சில பிரச்னைகள் உள்ளன. அவர்கள் கடந்த ஆண்டு பட்ஜெட்டை இந்த ஆண்டு வாசிக்கிறார்கள். 


அப்படிப்பட்ட தவறை யாரும் செய்யக்கூடாது என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். ஆனால், இன்று அது நடந்துவிட்டது, அதனால் அதைக் குறிப்பிட வேண்டும்" என்றார்.


இந்திய பொருளாதாரம் குறித்து பேசிய நிதியமைச்சர், "2023-24 பட்ஜெட்டின் சாராம்சத்தை நான் சில வார்த்தைகளில் கூறினால், இந்திய வளர்ச்சிக்கான தேவைகளை நிதி விவேகம் வரம்பிற்குள் சமநிலைப்படுத்துகிறது. 


இந்தியா தொற்றுநோயிலிருந்து மீண்டு வருவதையும், மீண்டு வருவதற்கான பாதை இருப்பதையும், நம்மால் மட்டுமல்ல, இந்தியப் பொருளாதாரத்தின் பல பார்வையாளர்களாலும் நாம் தெளிவாகக் கவனிக்க முடியும் என்ற பின்னணியுடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.


பிப்ரவரி 22 முதல் ரஷ்ய-உக்ரைன் போரும் நடந்து வருகிறது. குறிப்பாக வளர்ந்து வரும் சந்தைகளில் எங்களிடம்  இதன் விளைவாக தனித்துவமான பணவீக்க அழுத்தங்கள் இருந்தன. மேலும், சீனாவில் கோவிட் மீண்டும் எழுச்சி பெற்றிருப்பது நாம் எதிர்பார்க்காத ஒரு பரிமாணத்தைச் சேர்த்தது. 


இதனால் சர்வதேச பொருட்களின் விலைகள் அதிகரிக்க வழிவகுத்தது. மேலும் தீவிர வானிலையின் மாறுபாடுகள் இந்தியாவில் மட்டுமல்ல, பல நாடுகளில் உணவுப் பணவீக்கத்தைத் தூண்டின.


சவால்கள் இருந்தபோதிலும், இந்தியப் பொருளாதாரம் இன்னும் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது. 23-2024 நிதியாடண்டிலும் இது தொடரும்" என்றார்.


உணவு மானியம் குறித்து பேசிய அவர், "உணவு மானியம் கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்த்தப்பட்டு ரூ.1.97 லட்சம் கோடியாக உள்ளது.


உர மானியம் நடப்பு நிதியாண்டில் 1.05 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 2.25 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மானியத்தை அதிகரிப்பதன் மூலம் உலகச் சந்தையில் உரங்களின் விலை உயர்விலிருந்து விவசாயிகளை அரசாங்கம் காத்துள்ளது" என்றார்.