மக்களுக்கு எப்போதும் விழிப்புணர்வு ஏற்படுத்த பல முன்னெடுப்புகளை எடுப்பதில் மும்பை காவல்துறை தான் முதலிடம். அவர்களின் சமூக வலைதள பக்கங்களில் இதுபோன்ற விழிப்புணர்வு வீடியோக்களை அவர்கள் தொடர்ந்து பதிவேற்றி வருகின்றனர். அந்த வீடியோக்களுக்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அத்துடன் அது பலரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. அந்த வகையில் தற்போது சாலை பாதுகாப்பு தொடர்பாக மும்பை காவல்துறை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. 


மும்பை காவல்துறை இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹெல்மட் அணிவது தொடர்பாக விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்தது. அந்த வீடியோவில் ஹெல்மட் அணிவதன் அவசியம் தொடர்பாக டபிள்யூடபிள்யூஇ(WWE) மல்யுத்த வீரர் கிரேட் காளி பேசியுள்ளார். அவர் அந்த வீடியோவில் ஹெல்மட் ஒன்றை அணிந்தும் காட்டியுள்ளார். இந்த வீடியோவை பதிவுசெய்து அத்துடன், "ஹெல்மெட் இல்லாமல் நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாது என்பது கிரேட் காளிக்கு தெரியும்" எனப் பதிவிட்டுள்ளது. 


 






மேலும் இந்த வீடியோவில் காளிக்கு ஹெல்மெட் சரியாக பொருந்தவில்லை. அதையும் மேற்கோள் காட்டி ஹெல்மெட் அணிவது மட்டுமல்லாமல் அதை சரியாக பொருந்தும் வகையில் அணியவேண்டும் என்றும் மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. சரியாக ஹெல்மெட் அணியாமல் நீங்கள் உங்களின் வீடுகளுக்கு உள்ளே மட்டும்தான் வாகனத்தை ஓட்ட முடியும் என்றும் நகைச்சுவையாகவும் மும்பை காவல்துறை பதிவிட்டுள்ளது. மும்பை காவல்துறையின் இந்தப் பதிவு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோவிற்கு தற்போது வரை 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து லைக் செய்துள்ளனர். அத்துடன் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்தும் வருகின்றனர். அத்துடன் பலரும் கிரேட் காளியின் இந்தச் செயலை வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும் மும்பை காவல்துறையின் நடவடிக்கையையும் பலரும் ரசித்து வருகின்றனர். 


கொரோனா காலத்தில் மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரியாக கடைபிடிக்கவேண்டும் என்று பல மாநில காவல்துறையினர் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு வந்தனர். அந்த வீடியோக்கள் அனைத்தும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது மீண்டும் மும்பை காவல்துறை வெளியிட்டுள்ள வீடியோவும் மக்களிடையே வரவேற்பை பெற்று வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: ‛பாலியல் வன்கொடுமையில் சமரசம் இல்லை’ பாதிரியாருக்கு ஜாமின் கேட்ட பெண் மனு தள்ளுபடி!