ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் தொடர்பாக வரும் அக்டோபர் 20ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் மேலும் ஒரு வாரத்திற்கு ஆர்யன் கான் சிறையில் இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.


மும்பை சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் ஆர்யன் கான் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆர்யன் கானின் ஜாமீன் மனு ஏற்கெனவே கீழமை நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 11ம் தேதி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மீதான விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் அதிகாரிகள் தன்னை வேண்டுமென்றே தொடர்புபடுத்தி இருப்பதாகவும், எனவே தனது ஜாமீன் மனுவை உடனடியாக விசாரித்து தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்றும் ஆர்யன் கான் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் இந்த வழக்கு தற்போது சரியான சென்று கொண்டிருப்பதால் கூடுதல் ஆவணங்கள் இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட இருப்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை மும்பை சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது. 




ஜாமீன் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது ஆர்யன்கான் தரப்பில் அவரது வழக்கறிஞர் ஆஜரானார். அப்போது கப்பலில்  ஆர்யன்கானிடமிருந்து தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தெரிவித்துள்ளார். போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கப்பலில் சோதனை நடத்தியபோது அவரிடம் பணம் எதுவும் இருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவர்கள் குறிப்பிடுவதுபோல, 13 கிராம் கொக்கையினோ, மெஃபெட்ரோன் பரவச மாத்திரைகள் ஆகியவற்றை ஆர்யன்கான் வைத்திருக்கவில்லை. அவரிடம் பணம் இருக்கவில்லை. போதை மருந்துகளை உட்கொள்ளவோ, விற்கவோ அவர் திட்டமிடவுமில்லை என்றும் தெரிவித்தார். ஆனால் போதைப்பொருள் கடத்தல் பிரிவு சார்பாக ஆஜரான வழக்கறிஞர்,  அனில் சிங் தனது வாதங்களை நிறைவு செய்ய முடியவில்லை. இதையடுத்து இந்த வழக்கு இன்றும் மீண்டும் விசாரணைக்கு வந்தது.


அப்போது ஆர்யன் கானுக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளதாக தெரிவித்தார்.அவருடைய வாட்ஸ் ஆப் சேட்கள் அதைதான் உறுதி செய்கின்றன என தெரிவித்தார்.
அப்போது ஆர்யன் கான் தரப்பில் ஆஜரான பிரபல வழக்கறிஞர் அமித் தேசாய் எதிர்ப்பு தெரிவித்தார். வாட்ஸ் ஆப் சேட்கள் ஒருவரின் தனிப்பட்ட உரையாடல்களாகவே கருதப்பட  வேண்டும். அதை வேறொருவர் படிக்கும்போது தவறாக நினைக்கக்கூடும். ஆனால் ரேவ் பார்ட்டி பற்றி அந்த சேட்களில் எதுவும் இல்லை என்றுதான் நான் கேள்விபட்டேன். வாட்ஸ்அப்பில் நண்பர்களுக்கிடையேயான சாதாரண உரையாடல்கள்கூட  சந்தேகத்திற்குரியதாகத் தோன்றும் வாய்ப்பு எப்போதும் உள்ளதாகவும் வழக்கறிஞர் தெரிவித்தார். 
இந்நிலையில் ஆர்யன் கானின் ஜாமீன் தொடர்பாக வரும் அக்டோபர் 20ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது