மும்பை நகரில் அக்டோபர் மாதத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ள நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அங்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக வானிலை ஆய்வு விடுத்துள்ள எச்சரிக்கையில், மும்பை நகருக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். காரணம் தென்மேற்கு பருவமழை திரும்பிச் செல்லும் காலம் இன்னும் ஒரு வாரத்திற்கு தாமதமாகியுள்ளது. இதனால் மும்பையில் மழை தொடர்கிறது. அக்டோபர் மாதத்தில் மும்பையில் 91 மிமீ மழை பெய்துள்ளது. இது இதுவரை இல்லாத அளவு. கடைசியாக கடந்த அக்டோபர் 2012ல் மும்பையில் 197.7 மிமீ மழை பெய்தது. இந்நிலையில் இன்னும் சில நாட்களுக்கு இதே நிலை தொடரும். இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். வடக்கு கர்நாடகா, கடலோர கர்நாடகா, கொங்கன் கரைப் பகுதி ஆகிய பகுதிகளில் வளிமண்டலத்தில் ஈரப்பதம் இன்னும் நீடிப்பதால் மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஸ்கைம்ட் வானிலை ஆராய்ச்சி மையத்தின் ஆய்வாளர் மகேஷ் பலாவட் கூறுகையில், இந்த வருடம் மும்பையில் இன்னும் ஒரு வாரம் மழை இருக்கும். அதன் பின்னர் பருவமழை ஓய்ந்துவிடும். இப்போது அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றார்.


எத்தனை நிறங்கள்? என்னென்ன அலர்ட்டுகள்?


இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும் எச்சரிக்கை அறிவிப்புகள் அனைத்தும் குறிப்பிட்ட சில நிறங்களை அடையாளமாகக் கொண்டுள்ளன. இந்த நிறங்களைக் கொண்டு எச்சரிக்கை அறிவிப்பின் தன்மையினை நாம் அறிந்து கொள்ள முடியும். எச்சரிக்கை அறிவிப்புகள் அடைமழை மற்றும் பனிப்பொழிவு, இடி மழை, திடீர் புயல் மற்றும் ஆலங்கட்டி மழை, தூசிப்புயல் என்று மூன்று பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.  


நாள் முழுவதும் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் மழையினை அடை மழை என்று வகைப்படுத்துகின்றனர். பெரிய அளவிலான துளிகளைக் கொண்ட மழையினைக் கனமழை என்று குறிப்பிடுகின்றனர். இதே போல், குளிர் காலங்களில் வானிலிருந்து பொழியும் வெண்ணிற உறைந்த பனித்திவலைகளைப் பனிப்பொழிவு (Snowfall) என்கின்றனர். இப்பனிப்பொழிவு குளிர் பிரதேச நாடுகளில் நாள் முழுவதும் விழுவதுண்டு. இந்திய வானிலை ஆய்வுத் துறை, அடைமழை / கனமழை மற்றும் பனிப்பொழிவினை பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்று நான்கு நிறங்களில் அடையாளப்படுத்துகிறது.


பச்சை அலெர்ட்:


ஒரு மணி நேரத்திற்கு 70 மில்லி மீட்டர் எனும் அளவில் பெய்யும் மழை அல்லது பனிப்பொழிவு பச்சை அலர்ட் மூலம் உணர்த்தப்படுகிறது.   இந்த மழை சாதாரணமானதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் எவ்விதப் பாதிப்புமில்லை என்று. இதனை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.


மஞ்சள் அலெர்ட்


இருபத்து நான்கு மணி நேரத்திற்கு 64.5 மில்லி மீட்டரிலிருந்து 115.5 மில்லி மீட்டர் வரை பெய்யும் மழை அல்லது பனிப்பொழிவு மஞ்சள் அலெர்ட் என்று வரையறுக்கப்படுகிறது. இந்த மழையினை அடைமழை அல்லது கனமழை  எனக் கூறுகின்றனர். இம்மழையினால் ஒரு சில பாதிப்புகள் ஏற்பட்டாலும், பெருமளவிலான பாதிப்புகள் இருக்காது என்று அறிந்து கொள்ளலாம். இதனை எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளலாம். இந்த எச்சரிக்கை தான் இப்போது மும்பைக்கு விடுக்கப்பட்டுள்ளது.


ஆரஞ்சு அலெர்ட்


ஒரு நாளில் அதாவது 24 நான்கு மணி நேரத்திற்கு 115.6 மில்லி மீட்டரிலிருந்து 204.4 மில்லி மீட்டர் வரை பெய்யும் மழை அல்லது பனிப்பொழிவு ஆரஞ்சு அலெர்ட் என்று பட்டியலிடப்படுகிறது. இந்த மழையினை பெரு மழை அல்லது மிகக் கனமழை என வரையறுக்கின்றனர். இப்பெரு மழையினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம். எனவே, எச்சரிக்கையுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். 


சிவப்பு  அலெர்ட்


24 மணி நேரத்திற்கு 204.5 மில்லி மீட்டர் அல்லது அதற்கு அதிகமான அளவில் பெய்யும் மழை அல்லது பனிப்பொழிவு சிவப்பு நிறத்தில் அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த மழையினை மிகமிக கனமழை என்கின்றனர். இம்மிகப் பெரு மழையினை விதிவிலக்கான கன மழை (Exceptionally Heavy Rainfall) என்று குறிப்பிடுகின்றனர். இம்மழையினால் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம். எனவே, எச்சரிக்கையுடன் முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும் என்று அர்த்தம்.


காலநிலை மாற்றமும் மக்கள் விழிப்புணர்வும்


காலநிலை மாற்றத்தால் உலக முழுவதுமே பருவமழைக் காலத்தில் அதிகனமழை அல்லது பருவம் தவறிய மழையால் வெள்ளம் என்பது வாடிக்கையாகிவிட்டது. சென்னை பெரு வெள்ளத்திற்குப் பிறகு மக்களும் குறிப்பாக சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களின் மக்கள் இந்த அலெர்ட்டுகள் குறித்து பரிச்சியம் ஆகிவிட்டார்கள் என்றே கூற வேண்டும். இதில் பரிச்சியம் ஆனால் மட்டுமே போதாது. காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்ற புரிதலையும் பெற வேண்டும் என்பதே சூழலியல் ஆர்வலர்களின் வலியுறுத்தலாக உள்ளது.