ஃபோர்டு  இந்தியா நிறுவனச் சொத்துக்களை வாங்க எம்.ஜி மோட்டார் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. 


அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் நீண்ட நாட்களாக வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. சென்னையில் மறைமலை நகர் மற்றும் குஜராத்தின் சனந்த் பகுதிகளில் அந்நிறுவனத்தின் வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் வருடத்திற்கு நான்கு லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில், தற்போது 80,000 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் அந்நிறுவனத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இந்தியாவில் உள்ள இரு ஆலைகளையும் மூட ஃபோர்டு நிறுவனம் முடிவெடுத்தது. 


இந்நிலையில், எம்.ஜி மோட்டார் நிறுவனம், ஃபோர்டு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது.பேச்சுவார்த்தை ஆர்மபக் கட்டத்தில் தான் இருப்பதாகவும், வரும் நாட்களில் உறுதியான தகவல்கள் வெளியாகும் என்றும் அறியப்படுகிறது. முன்னதாக, தமிழக தொழில்துறை அதிகாரிகள் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், "ஜூன் 2022 வரை கால அவகாசம் உள்ளது. ஃபோர்டு ஆலைகளை தொடர்ந்து இயக்கச் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் அனைத்தும் யோசிக்கப்பட்டு வருகின்றன. ஃபோர்டு ஆலை வேறு ஏதேனும் ஆட்டோமொபைல்  நிறுவனம் கையகப்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. இதுவொரு நல்ல சொத்து. விற்பனை பரிவர்த்தனையை எளிதாக்குவோம்," என்று  கூறினார். மேலும், 3,300 தொழிலாளர்கள் வேலை செய்யும் மறைமலைநகரில் உள்ள உற்பத்தி ஆலையில் நிலைமையை மாநில அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என்றும் தெரிவித்தார்.   


முன்னதாக, கடந்த செப்டம்பர் 13ம் தேதி, தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளரை சந்தித்த தொழிற்சாலை ஊழியர் அசோக் தெரிவிக்கையில், நீண்ட காலமாக இங்கு பணியாற்றி வருபவர்கள் இருக்கிறார்கள். சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக என் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்திற்காக அவர்கள் பல்வேறு தியாகங்களை செய்துள்ளனர். இருக்கும் ஊழியர்களின் பணி இழப்பை நாங்கள் விரும்பவில்லை.




ஒவ்வொரு ஊழியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைவருக்கும் பணியைத் தொடர்ந்து செய்வதற்காக முயற்சிகளை எடுக்க வேண்டும். தொழிற்சாலை வேறு நிறுவனம் வாங்கும்போது எங்களுக்கான பணி உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார். அதற்கு நிர்வாகம் சார்பில் நாளை பதில் அளிக்க இருப்பதாக தெரிவித்தார், தொழிற்சாலை நிர்வாகத்தின் பதில்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நகர்வு குறித்து முடிவு எடுக்கப்படும் என பேசினார். 


மேலும், வாசிக்க: 


‘ஃபோர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்’ – கமல்ஹாசன் கோரிக்கை..!  


FORD INDIA "ஊழியர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துங்கள்" என தொழிற்சாலை ஊழியர்கள் கோரிக்கை