ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு ஒலிம்பிக் களத்தில் ஹாக்கி பந்தை விரட்டிய மங்கைகள் இன்று நம் தேசத்துக்கு புதிய பெருமித அடையாளத்தைத் தேடித் தந்துள்ளனர். ஆனால், ஷார்ட்ஸ் அணிந்து வந்ததாலேயே தேர்வு எழுத ஒரு சிறுமிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் இச்சம்பவம் நடந்திருக்கின்றது.


அஸ்ஸாம் மாநிலம் தேஜ்பூர் நகரில் கடந்த புதன்கிழமையன்று அசாம் வேளாண் பல்கலைக்கழகத்தில் பயில்வதற்கான நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 19 வயதான ஜூப்ளி தமுலி தனது தந்தையுடன் தேர்வு மையத்துக்குச் சென்றார். ஜிப்ஸ் எனப்படும் கிரிஜாநந்தா சவுத்ரி இன்ஸ்டிட்யூட் ஆஃப் பார்மாசிடிகல்ஸ் சயின்சஸ் மையத்தில் தேர்வு எழுதவிருந்தார்.


ஆனால், தேர்வு அனுமதி அட்டையுடன் சென்ற அவரை உள்ளே அனுமதிக்க தேர்வு கண்காணிப்பாளர்கள் மறுத்தனர். ஜூப்ளி அணிந்திருந்த ஷார்ட்ஸ், டிஷர்ட் உடையே அதற்குக் காரணம். இப்படியொரு உடையை அணிந்து கொண்டு தேர்வு எழுத முடியாது எனக் கூறியுள்ளனர். அதிர்ந்து போன மாணவி இதே உடையில் தான் கடந்த வாரம் நீட் தேர்வு எழுதினேன் என்று சமாதானப்படுத்த முயன்றுள்ளார். ஆனால் தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. உடனே, மாணவியின் தந்தை 8 கி.மீக்கு அப்பால் இருக்கும் கடைக்குச்சென்று மகளுக்கு பேன்ட் வாங்கச் சென்றார். அதற்குள் நேரம் ஓடிக் கொண்டிருக்க மாணவி அழுது புலம்பினார்.




உடனே தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் ஜன்னல் திரைச்சீலை ஒன்றை எடுத்துவந்து கொடுத்துள்ளனர். மாணவி இடுப்பில் அதை சுற்றிக் கொண்டு பின்னர் தேர்வு எழுதச் சென்றுள்ளார். இது குறித்து மாணவி ஜூப்ளி செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், இது மிகப்பெரிய அநீதி. தேர்வு மையத்தில் உடல் வெப்பம் பரிசோதிக்கவில்லை, மாஸ்க் பற்றி கேள்வி கேட்கவில்லை. ஆனால், எனது ஷார்ட்ஸ் மட்டும் அவர்களுக்கு சர்ச்சையாக இருந்துள்ளது. தேர்வுக்கான அனுமதிச் சீட்டில் உடைக்கட்டுப்பாடு குறித்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை. அதனால், நான் நீட் தேர்வுக்கு அணிந்து சென்ற அதே உடையை இங்கேயும் அணிந்து வந்தேன். தேர்வுக்கு வரும்போது எத்தகைய உடை அணிய வேண்டும் என்ற பொது அறிவு கூட எனக்கு இல்லை என்று அவர்கள் விமர்சித்தனர்.


இது ஏற்புடையதல்ல. என் வாழ்நாளின் மிக மோசமான நாளை நான் அனுபவித்தேன். நான் சிறுமைப்படுத்தப்பட்டேன். இது குறித்து அஸ்ஸாம் கல்வி அமைச்சர் ரனோஜ் பேகுவுக்கு நான் கடிதம் எழுதவுள்ளேன். ஒரு ஆணின் உடை இங்கே எப்போதுமே கேள்விக்கு உள்ளாவதில்லை. சில நேரங்களில் பொது இடங்களில் கூட ஆண்கள் மேலாடை இல்லாமல் இருக்கின்றனர். ஆனால் ஒரு பெண் ஷார்ட்ஸ் அணிந்தால் இத்தனை கெடுபிடியா? ஒரு திரைச்சீலையை சுற்றிக் கொண்டு நான் தேர்வு எழுத மிகவும் சிரமப்பட்டேன் என்று கூறினார்.


இது குறித்து தேர்வு மையமாக இருந்த கல்லூரியின் முதல்வர் டாக்டர் அப்துல் அகமதிடம் கேட்டபோது, ”தேர்வின்போது நான் கல்லூரியில் இல்லை. தேர்வு மையமாக மட்டுமே எங்கள் கல்லூரி செயல்பட்டது. தேர்வு கண்காணிப்பாளர்கள் கூட வெளியில் இருந்து வந்தவர்களே. இருப்பினும், தேர்வுக்கு வரும்போது எப்படி பிள்ளைகளை அனுப்ப வேண்டும் என்று பெற்றோர் அறிந்திருக்க வேண்டும்” என்று கூறினார்.