மேகாலயாவின் மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டம் ஷாங்பங்கில் சிறையில் இருந்த தப்பித்த நால்வரை பொதுமக்கள் சேர்ந்து அடித்து துவைத்துள்ளனர். ஜோவாய் சிறையில் இருந்து தப்பி ஓடிய ஐந்தாவது நபரை கிராம மக்கள் திங்கள்கிழமை பிடித்து போலீசில் ஒப்படைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தப்பியோடிய ஆறாவது கைதி இன்னும் பிடிபடவில்லை.


 






சிறையில் இருந்து தப்பித்து வந்த ரமேஷ் ஷாங்பங் கிராமத்திலிருந்து தப்பியோட முயன்றபோது கிராமத்தில் வசிக்கும் ஒரு குழுவினர் அவர் மீது தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். தட்மூத்லாங்-ஷாங்பங் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கும்பல் வன்முறையில் இருந்து ரமேஷ் மயிரிழையில் தப்பினார். அங்கு, அவருடன் தப்பிய மற்ற நான்கு பேரும் அடித்துக் கொல்லப்பட்டனர்.


கிராம மக்கள் நால்வரை தாக்கிய நிலையில், ​​குடியிருப்பாளர்கள் ரமேஷை பிடித்து, அவரைக் கட்டி வைத்து, கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்று காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் காவல் கண்காணிப்பாளர் பி.கே. மரக் இதுகுறித்து கூறுகையில், "கிராம மக்கள் ரமேஷ் பிடிப்பட்ட உடனேயே, நாங்கள் உஷார்படுத்தப்பட்டோம். 


நேற்று போல விஷயங்கள் தீவிரமடைவதற்கு முன்பு அவரைக் கைது செய்ய ஒரு குழு ஷாங்பங் கிராமத்திற்கு விரைந்தது. சட்டத்தை கையில் எடுக்காமல், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திய ஷாங்பங் பகுதி மக்களை நான் பாராட்ட வேண்டும்" என்றார்.


ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்ட நான்கு கைதிகளில் ஐ லவ் யூ தலாங் என்ற கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர், மர்சாங்கி தரியாங், கடுமையான சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கொலைக் குற்றவாளி மற்றும் விசாரணைக் கைதிகளான லோடெஸ்டார் டாங் மற்றும் ஷிடோர்கி த்கார் ஆகியோர் அடங்குவர்.


விசாரணைக் கைதியான ரிக்மென்லாங் லாமரேவைக் கைது செய்வதற்கான தேடுதல் வேட்டையில் இப்போது காவல்துறை ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை ஜோவாய் காவல் நிலையத்தில் கும்பல் வன்முறைக்கு எதிராக தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளதாக எஸ்பி தெரிவித்தார்.


ஜோவாய் மாவட்ட சிறையில் இருந்து 6 கைதிகளும் சனிக்கிழமை மதியம் தப்பினர். மூன்று மாதங்களில் இதே சிறையிலிருந்து இரண்டாவது முறையாக சிறைவாசிகள் தப்பித்துள்ளனர்.