கொரோனா பெருந்தொற்றுக்கான தடுப்பு மருந்தை உற்பத்தி செய்து, அதன் தரத்தை சோதிக்க நேரம் தேவைப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசியை, நேரடியாக மக்களிடம்  நிர்வகிக்க குறைந்தது 4 மாத காலம் இடைவெளி தேவைப்படுகிறது என்று கோவாக்சின் தடுப்பூசியை தயாரிக்கும்  பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.   


"தடுப்பூசிகளின் உற்பத்தி, மருத்துவப் பரிசோதனை, விநியோகம் என்பது நூற்றுக்கணக்கான படிகளைக் கொண்ட சிக்கலான மற்றும் பன்முக கண்காணிப்பு செயல்முறையைக் கொண்டது. தடுப்பு மருந்தின் உற்பத்தியை ஒரே நாளில் அதிகரித்து விட முடியாது. உற்பத்தியை அதிகரிக்க படிப்படியான செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மருந்துப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் நல்ல நடைமுறையில் (GMP) உள்ள பல வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.    


இந்தியாவில் விநியோகிக்கப்படும் அனைத்து தடுப்பூசிகளும் பரிசோதனைக்காக மத்திய மருந்துகள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.  பின்னர், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து, அவை மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. பின், அந்தந்த தடுப்பூசி மையங்களுக்கு முறையாக அனுப்பி வைக்கப்படுகின்றன. எனவே, உற்பத்திக்கும்- தடுப்பூசி நிர்வகிப்பதற்கும் இடையே குறைந்து 4 மாதகால இடைவெளி தேவைப்படுகிறது" என்றும் தெரிவித்தது.      


2021, மே 28 காலை நிலவரப்படி, 2,76,66,860 தடுப்பு மருந்து டோஸ்களை இந்திய அரசுக்கு பாரத் பயோடெக் வழங்கியுள்ளது.  மேலும், இந்த மாதத்தில், கூடுதலாக 21,54,440 கோவேக்சின் டோஸ்கள் விநியோகிக்கப்பட உள்ளன. இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில், பாரத் பயோடெக் விநியோகம் செய்த மொத்த தடுப்பூசி எண்ணிக்கை  3,11,87,060 டோஸ்களாக எட்டியுள்ளது. ஜூன் மாதத்தில் 90,00,000 டோஸ்கள் விநியோகிக்கப்படும் என்று தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


முன்னதாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், "வரும் ஆகஸ்ட் முதல் 2021 டிசம்பர் வரை, இந்தியா, 216 கோடி டோஸ் தடுப்பூசிகளை கொள்முதல் செய்யும் (கோவாக்சின் 50- 55 கோடி) எனவும், இந்தாண்டு ஜூலை மாதத்துக்குள் 51 கோடி டோஸ்கள் கொள்முதல் செய்யப்படும். இதன் மூலம், நாட்டின் அனைத்து மக்களுக்கும் 2021 டிசம்பர் மாதத்துக்குள் தடுப்பூசி நிர்வகிக்கப்படும்" என்று தெரிவித்தார். 


 



55 கோடி கொவாக்சின் தடுப்பூசி டோஸ்கள் கொள்முதல் செய்யப்படும்   


 


இதற்கிடையே, ஏப்ரல் 16ம் தேதி உள்நாட்டு கொரோனா தடுப்பூசிகள் உற்பத்தியை அதிகரிக்க, தற்சார்பு இந்தியா திட்டம் 3.0-ன் கீழ் கோவிட்- 19  சுரக்‌ஷா திட்டத்தை  மத்திய அரசின்  உயிரிதொழில்நுட்பத் துறை அமல்படுத்தியது.


இத்திட்டத்தின் கீழ், உள்நாட்டில் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியின் தற்போதைய உற்பத்தி திறன், 2021 மே-ஜூன் மாதங்களில் இரட்டிப்பாக்கப்படும் மற்றும் 2021 ஜூலை -ஆகஸ்ட்டில் 6 முதல் 7 மடங்காக உற்பத்தி அதிகரிக்கப்படும்.


உதாரணமாக ஏப்ரலில் 1 கோடியாக இருக்கும் கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி, ஜூலை -ஆகஸ்ட் மாதத்தில் 6 முதல் 7 கோடியாக அதிகரிக்கப்படும்.  இந்த அளவு 2021 செப்டம்பரில், சுமார் 10 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




 


எனவே, ஏற்கவனே, விநியோகம் செய்யப்பட்ட  3,11,87,060 தடுப்பூசி டோஸ்கள் + ஜூன் மாதத்தில் விநோயோகம் செய்யப்படவுள்ள 1 கோடி டோஸ்கள் +  ஜூலை -ஆகஸ்ட் மாதத்தில் உற்பத்தி செய்யப்போகும் 12 கோடி டோஸ்கள் என அனைத்தையும் கூட்டினால் இந்தாண்டு 16 கோடி தடுப்பூசி டோஸ்களை மட்டுமே பாரத் பயொடேக் நிறுவனத்தால் மத்திய அரசுக்கு வழங்கப்படும். 


எனவே, தடுப்பூசி கொள்முதல் தொடர்பான மத்திய அரசின் இலக்கும், வாக்குறுதியும் கள நிலவரத்தோடு ஒத்துப்போகாத சூழல் உருவாகியுள்ளது.