மண்டல, மகர விளக்கு பூஜைகளை தொடர்ந்து கடந்த மாதம் அடைக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, மாசி மாத பூஜைக்காக இன்று திறக்கப்படுகிறது. கும்பம் மாத பூஜைக்காக இன்று மாலையில் திறக்கப்பட்டு வரும் 17ஆம் தேதி வரை, அதாவது 5 நாட்கள் சிறப்பு பூஜை மற்றும்  வழிபாடுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சபரிமலை ஐயப்பன் கோயில்:


கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். நடப்பாண்டிற்கான மகரஜோதியை தரிசிப்பதற்காக கடந்த 14-ந் தேதி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதேபோன்று,  ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். அதன்படி மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட உள்ளது.


நடைதிறப்பு:


இதுதொடர்பான தேவஸ்தான அறிக்கையில், ”சபரிமலை கோயிலில் மாலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் ஜெயராமன் நம்பூதிரி நடையை திறக்க உள்ளார். பின்னர், அன்றிலிருந்து 5 நாட்களுக்கு அதாவது 17-ந் தேதி வரை சிறப்பு பூஜைகளுடன், பக்தர்களும் வழிபாட்டிற்கும் அனுமதிக்கப்பட உள்ளனர். இறுதியாக, 17ம் தேதி இரவு 7 மணிக்கு படிபூஜை முடிந்ததும் இரவு 10 மணிக்கு ஹாரிவராசனம் சங்கீர்த்தனம் பாடப்பட்டு நடை அடைக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிறப்பு பூஜைகள்: 


தினசரி ஆலயத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இந்த பூஜைகளை நேரில் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள்  http://www.sabarimalaonline.org  எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம். இதனிடையே, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.


உண்டியல் வசூல்:


சபரிமலையில் 2022-2023ஆம் ஆண்டுக்கான மண்டல மகரவிளக்கு சீசன் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி நிறைவடைந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டதால் தினசரி 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கடந்த சீசனில் 50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்தனர். இதன்மூலம் தேவஸ்தானத்திற்கு ரூ.380 கோடி வருமானம் கிடைத்தது. இதனிடையே, சன்னிதானத்தை சுற்றி பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த காணிக்கை பெட்டிகளில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தை எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த காணிக்கை பெட்டிகளில் இருந்து சுமார் 18 கோடி ரூபாய் கிடைக்கப்பெறலாம் என கூறப்படுகிறது.