காங்கிரஸ் கட்சி விரும்பினால் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கலாம் என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 


இந்தியாவில் உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலத் தேர்தல் வாக்குப் பதிவு கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று (மார்ச் 10) நடைபெற்றது. இதில் பஞ்சாப் தவிர்த்து 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியைத் தக்க வைத்தது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி புதிய ஆட்சியைப் பிடித்தது.


இந்நிலையில், 4 மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் கவலைகொள்ள வேண்டாம் என்றும் விரும்பினால் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கலாம் என்றும் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்த அவர், ''காங்கிரஸ் விரும்பினால், அனைவரும் ஒன்றாக இணைந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கலாம். இப்போது நாம் எந்தத் தாக்குதலையும் முன்னெடுக்க வேண்டியதில்லை. நேர்மறையாக இருந்தால் போதும். 


4 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வென்றுள்ளது அவர்களுக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும். இந்த முடிவுகளே 2024 தேர்தல் முடிவுகளுக்கு அச்சாரமாக இருக்கும் என்று நடைமுறைக்கு மாறானது.


வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி மற்றும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மனம் தளரக்கூடாது. சம்பந்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களில் தடயவியல் சோதனை நடத்தக் கோரிக்கை விடுக்க வேண்டும். இந்த முறை அகிலேஷ் யாதவின் வாக்கு சதவீதம் 20-ல் இருந்து 37 ஆக அதிகரித்துள்ளது'' என்று  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண