வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து INDIA கூட்டணியை உருவாக்கின. இந்த கூட்டணியின் முதல் மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் ஏற்கனவே பீகார், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நடந்தன.


INDIA கூட்டணியின் ஆலோசனை கூட்டம்:


ஐந்து மாநில தேர்தல் நடைபெற்றதால், கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறாமல் இருந்தது. இச்சூழலில், டெல்லியில் இன்று INDIA கூட்டணியின் நான்காவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, கடந்த 6ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இந்த ஆலோசனைக் கூட்டம், கூட்டணியில் நிலவிய குழுப்பம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.


சட்டப்பேரவை தேர்தலில் தொகுதி பங்கீட்டால் ஏற்பட்ட பிரச்னை காரணமாக காங்கிரஸ் மீது சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அதிருப்தி தெரிவித்திருந்தார். தெலங்கானாவை தவிர்த்து 4 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததும் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே அவநம்பிக்கை நிலவியதற்கு காரணமாக சொல்லப்பட்டது. 


இருப்பினும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எடுத்த முயற்சியின் காரணமாக பிரச்னை தீர்க்கப்பட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. 


மம்தா போட்ட பக்கா பிளான்:


இந்த நிலையில், INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கேவை முன்மொழிய வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். மம்தாவின் திட்டத்துக்கு 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.


குறிப்பாக, காங்கிரஸ் கட்சியுடன் பல்வேறு விவகாரங்கள் மாற்று கருத்து கொண்ட ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும், மம்தாவின் ஐடியாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.


இருப்பினும், மம்தாவின் கோரிக்கையை ஏற்க மறுத்த மல்லிகார்ஜுன கார்கே, "நாம் முதலில் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பு  பிரதமரை பற்றி விவாதிப்பதில் என்ன பயன்? நாம் இணைந்து பெரும்பான்மையை பெற முயற்சிப்போம்" என்றார்.


தலித் சமூகத்தை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியிலும் ஆட்சியிலும் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். தேர்தலுக்கு பிறகே, பிரதமரை தேர்வு செய்வோம் என நேற்று வரை கூறி வந்த மம்தா, இன்று, கார்கேவை பிரதமராக முன்மொழிந்து இருப்பது முக்கிய அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.


இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.