இந்தியாவுடன் நெருக்கமான நட்புறவைப் பேணி வந்த மாலத்தீவு அதிபர் முகமது சோலி, சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தார். கடும் போட்டிக்கு மத்தியில் எதிர்க்கட்சி வேட்பாளரான முகமது முய்சு வெற்றி பெற்றார். 


அதிபராக பதவியேற்ற அடுத்த நாளே அதிரடி:


மாலத்தீவு அதிபர் தேர்தலில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை தலைமை தாங்கி நடத்தியவர் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன். இவரது பிரச்சாரமே, 'இந்தியாவே வெளியேறு' என்ற முழக்கத்தை மையமாக வைத்து முன்னெடுக்கப்பட்டது.


இந்தியப் படைகளை மாலத்தீவில் இருந்து வெளியேற்றுவேன் என முகமது முய்சு வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி, இந்தியப் படைகளை வெளியேற்றுவேன் என அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதில் இருந்தே முகமது முய்சு வலியுறுத்தி வந்தார்.


இந்த நிலையில், அதிபராக பதவியேற்ற அடுத்த நாளே, மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என இந்திய அரசிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது என முகமது முய்சு தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவை சந்தித்து முறைப்படி கோரிக்கை விடுத்ததாக முய்சு கூறியுள்ளார்.


மத்திய அமைச்சர் ரிஜிஜூவிடம் அதிபர் முய்சு கூறியது என்ன? 


முய்சுவின் பதவியேற்பு விழாவுக்காக கிரண் ரிஜிஜூ மாலத்தீவு சென்றிருந்தார். மருத்துவ உதவிக்காகவும் போதை பொருள் கடத்தல் நடவடிக்கைக்காகவும் மாலத்தீவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள் குறித்து முய்சு, ரிஜிஜூ ஆகியோர் இடையே நடந்த சந்திப்பின்போது, பேசப்பட்டதாக இந்திய தரப்பும் தகவல் வெளியிட்டுள்ளது.


மாலத்தீவு குடிமக்களை மருத்துவ உதவிக்காக வெளியேற்றுவதற்கு இந்திய ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் பங்களித்தாக ரிஜிஜூவிடம் முய்சு கூறியுள்ளார். மாலத்தீவில் தங்கியிருக்கும் போது சர்வதேச சுற்றுலாப் பயணிகள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு இந்திய ராணுவம் முக்கிய காரணம் என்றும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


மாலத்தீவில் எவ்வளவு இந்திய படைகள் குவிக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. மாலத்தீவில் இந்திய ராணுவத்தை குவிப்பது தொடர்பாக இரு நாடுகள் மேற்கொண்ட ஒப்பந்தத்தில் ரகசியம் காக்கப்பட்டது பல்வேறு வதந்திகளுக்கு வழிவகுத்தது. அதேபோல, அதன் நோக்கம் குறித்து தொடர் கேள்வி எழுப்பப்பட்டு வந்துள்ளது.


மாலத்தீவுக்கு இரண்டு ஹெலிகாப்டர்களை இந்தியா நன்கொடையாக வழங்கியிருந்தது. இந்த ஹெலிகாப்டர்களை இந்திய ராணுவ வீரர்கள்தான் இயக்கி வந்தனர். அதேபோல, இயற்கை பேரிடரின்போது கடலில் சிக்கிய மக்களைக் காப்பாற்ற இந்திய ராணுவ வீரர்கள் பெரும் பங்காற்றினர். 


மாலத்தீவு அதிபர் தேர்தலில் தற்போது வெற்றிபெற்றுள்ள எதிர்க்கட்சி கூட்டணியான மக்கள் தேசிய காங்கிரஸ் - மாலத்தீவு முற்போக்கு கட்சி, சீனாவுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்தது. அப்துல்லா யாமீன் ஆட்சிக் காலத்தில், உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக சீனாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை மாலத்தீவு கடனாக பெற்றது. தேர்தலில் முய்சு வெற்றிபெற்றதால் சீனாவுக்கு மட்டும் இன்றி சீன முதலீட்டாளர்களுக்கும் இது மிகப் பெரிய வாய்ப்பை தரும் எனக் கூறப்படுகிறது.