சைஃப் அலிகானை கத்தியால் குத்தியது உண்மை இல்லை என பாஜக அமைச்சர் நிதேஷ் ரானே பரபர குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். ஏற்கனவே, கேரளாவை மினி பாகிஸ்தான் என குறிப்பிட்டு சர்ச்சையில் சிக்கிய நிதேஷ் ரானே, சைஃப் அலிகான் விவகாரத்தில் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். 

பகீர் கிளப்பும் பாஜக அமைச்சர்:

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் வீட்டில் புகுந்த மர்ம நபர், அவரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொள்ளை அடிப்பதற்காக பலத்த பாதுகாப்பை மீறி அவர் எப்படி அந்த வீட்டில் நுழைந்தார் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

இந்த நிலையில், சைஃப் அலிகான் கத்திக்குத்து சம்பவம் குறித்து மகாராஷ்டிரா பாஜக அமைச்சர் நிதேஷ் ரானே தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கின்றன. அவரை கத்தியால் குத்தினார்களா இல்லை அவர் நடிக்கிறாரா என்பதில் சந்தேகம் இருப்பதாக அவர் கூறியுள்ளார். 

சைஃப் அலிகானை குப்பை என குறிப்பிட்டு பேசிய அவர், "மும்பையில் வங்கதேச மக்கள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் சைஃப் அலி கானின் வீட்டிற்குள் நுழைந்தனர். முன்பெல்லாம் ரோடு கிராசிங்குகளில் நின்றிருந்தார்கள். இப்போது வீடுகளுக்குள் நுழைய ஆரம்பித்துவிட்டனர். ஒருவேளை அவர் அவரை (சைஃப் அலிகான்) அழைத்துச் செல்ல வந்திருக்கலாம். நல்லதுதான். குப்பையை அகற்ற வேண்டும்.

"இந்து நடிகருக்கு இப்படி நடந்தா வருவாங்களா"

மருத்துவமனையை விட்டு வெளியே வந்ததும் பார்த்தேன். அவர் (சைஃப் அலிகான்) கத்தியால் குத்தப்பட்டாரா, அல்லது அவர் நடிக்கிறாரா என்று எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர், நடந்து கொண்டே நடனமாடிக் கொண்டிருந்தார்" என்றார்.

 

சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களை விமர்சித்து பேசிய பாஜக அமைச்சர், "எல்லோரும் அதை பற்றி பேச ஆரம்பிக்கிறார்கள். சுஷாந்த் சிங் ராஜ்புத் போன்ற ஒரு இந்து நடிகர் சித்திரவதை செய்யப்பட்டால், யாரும் எதுவும் சொல்ல முன்வருவதில்லை" என்றார்.