வயது உடலுக்குத் தான் மனதுக்கு அல்ல. மனம் இருந்தால் எந்த வயதிலும் எதுவும் சாதிக்கலாம். அதைத்தான் செய்திருக்கிறார் இந்த தூய்மைப் பணியாளர்.


மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் குஞ்சிகோர்வே மச்சண்ணா ராமப்பா. 50 வயதாகும் ராமப்பா கடந்த 20 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக உள்ளார். இவர் அண்மையில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினார். அதில் தேர்ச்சியும் பெற்றுள்ளார். அதுவும் எல்லா பாடங்களிலும் அவர் 50%க்கும் மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார்.


வேலை ஒருபுறம் கல்வித்தாகம் மறுபுறம்:


குஞ்சிகோர்வே மச்சண்ணா ராமப்பா, தூய்மைப் பணியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தாலும் கூட அவருக்கு கல்வி கற்க வேண்டும் என்ற ஆசை மனதில் இருந்துள்ளது. அதனால் அவர் தனது விருப்பத்தை தனது வீட்டாரிடம் சொல்லியுள்ளார். அவர்களும் ராமப்பாவை ஊக்குவித்துள்ளனர். பிறகு அவர் வசித்த பகுதியில் இருந்த முதியோர் பள்ளியில் இணைந்தார். அவர் மும்பையின் தாராவியில் வசித்து வருகிறார். ஆசியாவின் மிகப்பெரிய சேரியாக இன்னமும் தாராவி திகழ பல அரசியல் பின்னணியில் இருக்கிறது. இருந்தாலும் அங்கிருக்கும் யுனிர்வசல் நைட் பள்ளியில் ராமப்பா இணைந்தார். பகல் முழுவதும் தூய்மைப் பணி. மாலை 7 மணி ஆரம்பித்து 8.30 மணி வரை அந்தப் பள்ளியில் நல்ல மாணவராக கல்வி கற்று வீடு திரும்புவாராம். அன்றைக்கான பாடங்களைப் படிக்காமல் தூங்கவே மாட்டாராம்.




 


இதுதான் ராமப்பாவின் மார்க்:


நடந்து முடிந்த தேர்வில் மராத்தியில் 54, இந்தியில் 57ஆங்கிலத்தில் 54 கணிதத்தில் 52, அறிவியலில் 53, சமூக அறிவியலில் 59 மதிப்பெண்களை பெற்றிருக்கிறார் ராமப்பா. எல்லா பாடங்களிலும் அவர் 50%க்கும் மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார். மொத்தம் 57% பெற்றுள்ளார். ராமப்பாவை அவரது குடும்பத்தினர், நண்பர்கள், அவர் படித்த யுனிர்வசல் நைட் பள்ளியின் ஆசிரியர்கள், சக மாணவர்கள் என பலரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.


ராமப்பா உருக்கும்:


தனது வெற்றி குறித்து ராமப்பா, "சிறுவயதில் என் குடும்பs சூழ்நிலை காரணமாக, eன்னால் பள்ளி கல்வியை தொடர முடியவில்லை. அப்புறம் தான் எனக்கு யுனிர்வசல் நைட் பள்ளியில் சேரும் யோசனை வந்தது. நான் படிக்க போகிறேன் என்று எனது குடும்பத்தினருடன் சொன்னபோது அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். நான் படிப்பில் தொடர்ந்து ஈடுபட உத்வேகம் அளித்தனர். அவர்கள் அளித்த ஊக்கம் தான் என்னை இன்று இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற வைத்திருக்கிறது. சிறுவயதில் படிக்க முடியாமல் போனதை எண்ணி பல நாட்கள் கவலைப்பட்டிருக்கிறேன். கல்வி கற்பதற்கு வயது தடை இல்லை என்பதை புரிந்துகொண்ட பின்னர் என் கனவுகளை நோக்கி ஓடினேன். இன்று வெற்றியும் பெற்றுள்ளேன்" என்றார்.
10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து, மேலும், படிக்க இருப்பதாகவும்  ராமப்பா அறிவித்திருக்கிறார்.