கேரள ரயிலில் பயணிகள் மீது தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட டைரியில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பெயர் எழுதியதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கேரள மாநிலம் ஆலப்புழா ரயில் நிலையத்தில் இருந்து கண்ணூர் வரை எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வியாழக்கிழமை, சனிக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் இயக்கப்பட்டு வருகிறது. மதியம் 2.55 மணியளவில் ஆலப்புழாவில் இருந்து புறப்படும் ரயில் இரவு 10.55 மணியளவில் தான் கண்ணூர் சென்றடையும்.  அதன்படி வழக்கம்போல இந்த ரயில் ஆலப்புழாவில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது.


இரவு 9.50 மணியளவில் கோழிக்கோடு ரயில் நிலையத்திற்கு இந்த ரயில் வந்தது. அப்போது  டி1 பெட்டியில் ஏறிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கோழிக்கோடு மற்றும் க்யூலாண்டி ரயில் நிலையங்களுக்கு நடுவே கோரபுழா ரயில்வே பாலத்தில் ரயில் சென்று கொண்டிருக்கும்போது பயணிகள் மீது திரவம் ஒன்றை தெளித்துள்ளார். அவரது செயலை சற்றும் எதிர்பாராத பயணிகள் என்ன நடக்கிறது என சுதாரிப்பதற்குள் அவர்கள் மீது தீ வைத்து விட்டு அந்த நபர் தப்பிச் சென்றார். 


உடனடியாக அவசர சங்கிலியை இழுத்து ரயில் நிறுத்தப்பட்டது. இந்த தீ வைப்பு சம்பவத்தில் 9 பேர் காயமடைந்து கோழிக்கோடு அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இதுதொடர்பாக விசாரணை நடந்தினர். மேலும் பயணிகள் பட்டியலை ஆய்வு செய்த போது 3 பேர் காணாமல் போனது தெரிய வந்தது.  உடனடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், ரயில் வந்த பாதையில் தேடிய போது ஒரு ஆண், பெண், குழந்தையின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டது. இவர்கள் ரயிலில் தீ வைத்ததை கண்டவுடன் உயிரைக் தற்காற்துக் கொள்ள ஓடும் ரயிலில் இருந்து குதித்தது தெரிய வந்தது. 


சம்பவ இடத்திற்கு அதிகாலையில் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் குற்றச்செயலில் ஈடுபட்ட நபர் அங்கிருந்து தப்பி பைக் ஒன்றில் ஏறிச் சென்ற சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். இதனடிப்படையில் பார்க்கும்போது  இந்த சம்பவம் திட்டமிட்டு நடந்த ஒன்றாக போலீசாரால் சந்தேகிக்கப்படுகிறது.  அதேசமயம் இலத்தூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கேட்பாரற்று பை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் பெட்ரோல் பாட்டில், டைரி, துண்டு பிரசுரம், மொபைல் ஃபோன், துணி ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது. 


அந்த டைரியில் கன்னியாகுமரி, கொல்லம் உள்ளிட்ட ரயில் நிலையங்களின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சில முக்கியமான தகவல்கள் அதில் எழுதப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இது பயங்கரவாதிகளின் சதிச்செயலாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் குற்றவாளியின் மாதிரி படத்தையும் கேரள காவல்துறை வெளியிட்டுள்ளது.