இந்திய அரசியலமைப்பின் அடிப்படை லட்சுமண ரேகையை தாண்டி,  பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் அரசின் உத்தரவுகளை நியாயப்படுத்தும் குரலாக நீதிமன்றங்கள் செயல்பட்டு வருவதாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கௌதம் பாட்டியா கருத்து தெரிவித்துள்ளார்.       


முன்னதாக, மீடியா ஒன் அலைவரிசையை  செயல்படுத்தி வரும் மத்யமம் ஒலிபரப்பு நிறுவனத்திற்கு  வழங்கப்பட்ட அப்லிங்க் மற்றும் டவுன்லிங்க் அனுமதியை  ரத்து செய்து தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் 2022 ஜனவரி 31 அன்று உத்தரவு பிறப்பித்தது.  இந்த அலைவரிசையின் பெயரை அனுமதிக்கப்பட்ட அலைவரிசைகளின் பட்டியலிலிருந்தும் இந்த உத்தரவு நீக்கியது. 




 


தகவல் மற்றும் ஒலிபரப்பு  அமைச்சகத்தின் உத்தரவை எதிர்த்து  மனுதாரர் கேரள உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுவைத் தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த  நீதிபதி ஜி.எம் நாகரேஷ் ரிட் மனுவைத் தள்ளுபடி செய்தார். மேலும், உள்துறை அமைச்சகத்தால் இந்த அலைவரிசைக்குப் பாதுகாப்பு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது, நியாயமானது என்றும் தெரிவித்தார்.  


தனது தீர்ப்பை நியாயப்படுத்தும் விதமாக, மூன்று முக்கிய கருத்துகளையும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். 


1. தேசிய பாதுகாப்பு விஷயங்களில் இயற்கை நீதிக் கோட்பாடுத் தத்துவத்தை பேணிக்காப்பதில் நீதிமன்றங்களின் தலையீடு மிகக் குறைவான பங்கைக் கொண்டுள்ளது.  


2. வேத காலத்தைச் சேர்ந்த "அத்ரிசம்ஹிதா" (Atrisamhita) என்ற நூல், "தேசிய பாதுகாப்பின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.  


3. சீல் வைக்கப்பட்ட உறையில் உளவுத்துறை அளித்த தகவல்கள் அடிப்படையில், இந்த அலைவரிசைக்குப் பாதுகாப்பு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது, நியாயமானது. 




ஆனால், இந்த மூன்று வாதங்களும் பொருந்தாதவையாக உள்ளன என்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. உதாரணமாக, தேசிய பாதுகாப்பு விசயங்களில் நீதிமன்றங்களின் தலையீடு குறைவானது என்ற வாதத்தை ஏற்க முடியாது என கௌதம் பாட்டியா தெரிவித்துள்ளார். 1985 ஆம் ஆண்டு இங்கிலாந்து மேலவையில் நடைபெற்ற ஒரு வழக்கில் தேசிய பாதுகாப்பை வரையறுக்கும் பொறுப்பு நீதிமன்றங்களின் வரம்பு வெளியே இருப்பதாக தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த, தீர்ப்பை முன்னுதாரனமாக கொண்டு இந்திய உச்சநீதிமன்றமும், கேரள உயர்நீதிமன்றமும் தீர்ப்புகளை முடிவெடுக்கின்றனர். 


ஆனால், இங்கிலாந்து நாடாளுமன்றம் சர்வவல்லமை கொண்ட ஒரு அரசு அமைப்பாக செயல்படுகிறது. இந்திய அரசியலமைப்பின் படி,  நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகிய 3 அங்கங்களும் அரசியலமைப்புக்கு உட்பட்டு செயல்படுவதை தான்  அரசு என்று கூறுகிறோம். இந்த மூன்று அங்கங்களும், தன்னிச்சையாக செயல்படக்கூடியவை. இருப்பினும்,  நாடாளுமன்றம் மற்றும்  நிர்வாகத்தை கண்காணிப்பும் ஒரு கருவியாக இந்தியாவின் நீதித்துறையை அரசியலமைப்பு வல்லுநர்கள் வடிவமைத்தனர். 


அரசியலமைப்பின் 19வது சரத்தின் படி, குடிமக்கள் அனைவருக்கும் பேச்சு, சிந்தனை வெளிபடுத்துகை ஆகியவற்றிற்கான சுத்தந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த, அடிப்படை உரிமையைக் காக்க வேண்டிய பொறுப்பு நீதித்துறைக்கு உண்டு. அடிப்படை உரிமைகள் மறுக்கும்போது நீதிமன்றத்தை அணுகுவதையும் ஒரு உரிமையாக கூறப்பட்டுள்ளது. 


இரண்டாவதாக, உளவுத்துறை தகவல்கள் சீல் வைக்கப்பட்ட உறையில் சமர்பிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், அலைவரிசைக்குப் பாதுகாப்பு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது  நியாயமானது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொதுத் தளத்தில் தகவல்கள் வெளியிடப்பட்டத்தால் அது ஆரோக்கியமான விவாதத்துக்கு வழிவகுக்கும். பேச்சுச் சுதந்திரம் தொடர்பான வழக்கில் வெளிப்படைத் தன்மையே சிறந்த நியாயத்தை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார். 


Censorship by Sealed Cover: The Kerala High Court’s MediaOne “Judgment” - GAUTAM BHATIA