கேரளாவையே உலுக்கிய ஆயூர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா மர்ம மரண வழக்கில் அவரது கணவர் குற்றவாளி என கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி அதிகாலையில் அவரது மாமியார் வீட்டில் மாணவி விஸ்மயா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 


செங்கொடி ஏந்திய பெண்களை முன்னத்தி ஏராகக் கொண்டு முற்போக்கு அரசாங்கத்தை நடத்திவரும் கேரளாவின் பினராயி விஜயன் ஆட்சியில் வரதட்சணைக் கொடுமையால் பெண் ஒருவர் மரணம் அடைந்தார் என்ற செய்தி இப்போது வரை ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. ஆயூர்வேத மருத்துவத்துக்குப் படித்து வந்த 22 வயது விஸ்மயாவை அவரது குடும்பம் இரண்டு வருடத்துக்கு முன்பு கோட்டயத்தைச் சேர்ந்த கிரண் என்பவருக்குத் திருமணம் செய்து வைத்தது. தனது பெண் கணவன் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காக நூறு சவரன் நகை, ஒரு ஏக்கர் நிலம், 9 லட்சத்துக்குக் கார் என வரதட்சணையை வாரி இறைத்திருக்கிறது குடும்பம். இத்தனைக் கொடுத்தும் விஸ்மயா அந்த வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கவில்லை. கிரண் விஸ்மயாவை அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார்.  திருமணமான ஆறு மாதத்திலேயே தன் பெற்றோர் வீட்டுக்குத் திரும்பிவிட்டார் விஸ்மயா. ஆனால் எப்படியோ சமாதானம் செய்து அவரைத் தன் வீட்டுக்கு மீண்டும் அழைத்துச் சென்றிருக்கிறார் கிரண். கிரண் அழைத்துச் சென்ற பிறகு தன் பெற்றோரிடம் பேசுவதையே முற்றிலுமாகத் தவிர்த்திருக்கிறார் விஸ்மயா. அதிகபட்சமாகத் தனது அம்மாவுடன் மட்டுமே அவரது உரையாடல் இருந்திருக்கிறது.


இதற்கிடையேதான் கிரண் தன்னை அடித்துத் துன்புறுத்திய புகைப்படங்களை தனது சகோதரருக்கு அனுப்பியிருக்கிறார் விஸ்மயா. வரதட்சணையாக அளித்த கார் வேண்டாம் அதற்கு பதிலாகப் பெற்றோரிடம் பணமாக வாங்கிவரும்படி விஸ்மயாவை வற்புறுத்தியிருக்கிறார் கிரண். முடியாது எனச் சொல்லவும் அடித்துக் கொடுமைப் படுத்தியிருக்கிறார். காரில் இந்தச் சண்டை நிகழ்ந்திருக்கிறது. விஸ்மயா காரை விட்டு வெளியேற முயற்சிசெய்ய அவரை முடியை பிடித்து இழுத்துக் கொடுமை செய்ததாகத் தனது சகோதரருக்கு அனுப்பியிருக்கும் வாட்சஅப் சாட்டில் சொல்லியிருக்கிறார். 


இந்தச் சம்பவம் நடந்த இரண்டு நாட்களில்தான் தனது கணவர் வீட்டில் பிணமாகக் கிடந்திருக்கிறார் விஸ்மயா. கொலையா தற்கொலையா என்கிற காரணம் தெரியவில்லை என்றாலும் இது வரதட்சணைக் கொடுமையால் நிகழ்ந்த மரணம். கேரள மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு தொடுத்தது.


வழக்கில் தீர்ப்பு வெளியானதை அடுத்து அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், இது தனிமனிதருக்கு எதிரான தீர்ப்பு அல்ல, சமூக அநீதிக்கு எதிரான தீர்ப்பு. குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வாங்கித்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.