தெலங்கானாவில் உருவாகும் புதிய கூட்டணி:


தேசிய அளவில் பாஜக அணிக்கு எதிராக காங்கிரஸ் இல்லாத புதிய அணிக்கான அச்சாரத்தை கம்மம் நகரில் இன்று போட்டுள்ளார் தெலங்கானா முதலமைச்சரும் பி.ஆர்.எஸ் கட்சியின் தலைவருமான கே. சந்திரசேகர ராவ். இந்த புதிய அணியின் பிரம்மாண்டகூட்டத்தில்,  திமுக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


தெலங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில், சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதேபோல், அடுத்த ஆண்டு முதல் பாதியில் நாடாளுமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. இந்தச் சூழலில், தேசிய அளவில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 3 மாநில முதலமைச்சர்கள் மற்றும் 2 மாநில முன்னாள் முதலமைச்சர்கள்  பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணியுடன் கூடிய பொதுக்கூட்டத்தை நடத்தியுள்ளார் சந்திரசேகர ராவ். 


அண்மையில், தேசிய அரசியலில் ஈடுபடுவதாகக் கூறி, மாநில அளவிலான தமது கட்சியின் பெயரை தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (TRS)  என்பதில் இருந்து பாரத் ராஷ்ட்ர சமிதி (BRS) என மாற்றினார். மாற்றியது மட்டுமில்லாமல், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, மதசார்பற்ற ஜனதாதளம், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து, பிரம்மாண்ட பேரணி, பொதுக்கூட்டம் மூலம், புதிய கூட்டணிக்கு, கம்மம் நகரில் இன்று அச்சாரம் போட்டுள்ளார் கேசிஆர்.


இந்தக் கூட்டத்தில், டெல்லி முதல் அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சரும் ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவருமான பகவத் மான், கேரள முதலமைச்சரும்  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களில் ஒருவருமான பினராயி விஜயன், சமாஜ்வாதி கட்சித்தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், மதசார்பற்ற ஜனதா தள தலைவரும் கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி, இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா உள்ளிட்ட பல முன்னணி தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 


தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக, மெகா கூட்டணி அமைக்கும் வகையில், நாடு முழுவதும் காங்கிரஸ் முன்னணித்தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி பாதயாத்திரை சென்று வருகிறார். காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மெகா கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கிட்டத்தட்ட ஒப்புக் கொண்டு, காங்கிரஸ் தலைமையில் தேசியஅளவில் மெகா கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலைச் சந்திக்கப்போகிறார்கள் என்ற வகையில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், காங்கிரஸ் இல்லாத புதிய அணியை அமைக்கும் வகையில், கேசிஆர் இறங்கியுள்ளது தற்போது தெளிவாகியுள்ளது. இதனால், அடுத்த ஆண்டு வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில், மூன்று பெரிய அணிகள் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தற்போது மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்த்து, கேசிஆர் தலைமையிலான அணி மற்றும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் தலைமையிலான இன்னுமொரு அணி என மூன்று அணிகள் களமிறங்க வாய்ப்பு இருப்பதை, BRS கட்சித் தலைவர் கேசிஆரின் இன்றைய பொதுக்கூட்டம் எடுத்துக்காட்டுகிறது எனலாம். 


திமுக கூட்டணியில் விரிசலா?


கேசிஆரின் கூட்டத்திற்கு திமுக-விற்கு அழைப்பு விடப்பட்டதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்  ஏதும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், திமுக-வைப் பொறுத்தவரை, காங்கிரஸ் உடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தலைச் சந்திப்பதில் எந்தவித குழப்பமும் இல்லை என்பதுதான், திமுக-வின் அரசியல் நகர்வுகளில் தெளிவாகத்தெரிகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு உள்ள நிலையில், காங்கிரஸை இழக்க திமுக தயாராக இருக்காது என்று எதிர்பார்க்கலாம். ஆனால், திமுக-வுடன் இணைந்து தேர்தல் களத்தைச்சந்தித்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடுதான் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. கேசிஆருக்கு ஆதரவாக தற்போது, தெலங்கானாவின் கம்மம் நகரின் பொதுக்கூட்டத்திலும், பேரணியிலும் இக் கட்சிகள் பங்கேற்று இருப்பது, காங்கிரஸ், திமுக கூட்டணியிலிருந்து கம்யூனிஸ்ட்கள் விலகுகிறார்களா என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்திற்கு மாநிலம் வெவ்வேறு அணிகள் என்ற வகையில், தெலங்கானாவில் காங்கிரஸ்க்கு எதிராக களமிறங்கும் கம்யூனிஸ்ட்கள், தமிழகத்தில் திமுக தலைமையிலான அணியில்  காங்கிரஸ் உடன் இணைந்து களத்தைச் சந்திக்கவும் வாய்ப்பு இருப்பதையும் மறுக்கவும் முடியாது. 


சந்திரசேகரராவின் இந்தப் பொதுக்கூட்டமும் பேரணியும் தேசிய அளவிலான அரசியலும் புதிய கூட்டணியை உருவாக்குமா, அதன் எதிரொலி தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தமட்டில், இன்று வரை திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி பலமாக உள்ளது. ஆனால், கம்யூனிஸ்ட்கள் இந்தக் கூட்டணியில் இருப்பார்களா அல்லது கேசிஆர் அமைக்கும் புதிய கூட்டணியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலைச்சந்திப்பார்களா என்பது பெரும் கேள்வியாக தற்போது எழுந்துள்ளது. ஏனெனில், கேசிஆரை பொறுத்தமட்டில், தெலங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற  தேர்தலைச்சந்திக்க இருப்பதால், அங்கு பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்கு எதிராகவும் தீவிர அரசியல் செய்து வருகிறார். எனவே, இன்றைய சூழலில், வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில், மூன்று பெரிய கூட்டணிகள் மோதப்போகின்றன என்பது மட்டும்தான் கிட்டத்தட்ட உறுதி என்றால் தவறில்லை.