உத்தர பிரதேசம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். 75ஆவது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடக்கும் இந்த நிகழ்வுக்கு ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்து பல குழுக்களாக பாரம்பரிய கலைஞர்கள் உத்தரபிரதேசம் சென்றுள்ளனர்.  


பழங்காலம் தொட்டே தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் உள்ள தொடர்பை கொண்டாடும் விதமாக இந்த சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் இந்த கொண்டாட்ட விழா நடைபெற்ற வருகிறது. 


காசி தமிழ் சங்கமம் : 


இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணையமைச்சர் எல். முருகன், மாநிலங்களவை உறுப்பினர் இளையராஜா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.


ஓம் சிவோஹம் :


இந்த நிகழ்ச்சியில் இளையராஜா பேசியதைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சி நடைபெற்றது. காசி தமிழ் சங்கத்தின் முதல் நிகழ்ச்சியாக இசைஞானி இளையராஜா தலைமையிலான குழுவின் இசை நிகழ்ச்சி தொடங்கியது. இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளியான நான் கடவுள் படத்தில் இடம்பெற்றிருந்த ’ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம்’ பாடலை இளையராஜா பாடினார். இந்த பாடலை பாட தொடங்கியதும் பிரதமர் மோடி கைகளை தட்டி ரசிக்க தொடங்க, இவரை தொடர்ந்து உத்தர பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் உள்ளிட்ட பலரும் விரும்பி ரசிக்க தொடங்கினர். 


இளையராஜா வியப்பு : 


நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பேசிய இளையராஜா, "காசி நகருக்கும் தமிழ்நாட்டிற்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என்பதை இங்கிருப்பவர்கள் அனைவரும் விளக்கி பேசினர். பாரதியார், இங்கு இரண்டு ஆண்டுகள் படித்திருக்கிறார். காசியில் கேட்க ஒரு கருவி செய்வோம் என்ற பாடலை எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத காலத்தில் பாடி உள்ளார். இங்கு படித்துதான் அவர் அறிவு பெற்றிருக்கிறார். பெருமைமிக்க காசி நகரத்தில் தமிழ் சங்கத்தை நடத்த வேண்டும் என்ற எண்ணம் நமது பிரதமருக்கு எப்படி தோன்றியது என்பதை பார்த்து வியந்தேன். என் உணர்வுகளை என்னால் முழுவதும் வெளிபடுத்த முடியவில்லை" என்றார்.