கர்நாடக மாநில முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவியேற்றார்.முதலமைச்சர் பதவியிலிருந்து எடியூரப்பா ராஜினாமா செய்த நிலையில், பெங்களூரூவில் நேற்று மாலை நடைபெற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், எடியூரப்பாவின் நம்பிக்கைக்குரியவரும், லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவருமான பசவராஜ் பொம்மை புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.


மாநிலத்தின் முதல்வராக பசவராஜ் பொம்மாய் நியமிக்கப்பட்டதை அடுத்து, பெங்களூரில் ஆளுநர் மாளிகைக்கு முன்பே பாஜக ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். பசவராஜ், 1988 இல் கர்நாடகா மாநிலத்தின் முதல்வராக இருந்த எஸ்.ஆர். பொம்மையின் மகனாவார்.






அரசியலமைப்புச் சட்டத்தின் 356 ஆவது பிரிவை பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைப்பது தொடர்பான எஸ். ஆர். பொம்மை தொடுத்த வழக்கு ((S. R. Bommai V. Union of India, வழக்கு எண் 1994 AIR 1918) மிக  முக்கியமானதாக கருதப்படுகிறது. இவ்வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்குப் பிறகு மாநில சட்டப்பேரவைகளை தன்னிச்சையாக கலைக்கும் போக்கு வெகுவாகக் குறைக்கப்பட்டன. மாநில அரசுகளைக் கலைப்பதில் ஒன்றிய அரசின் உரிமைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டன.  


தென் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, புதுச்சேரியில் பாஜக பெரிய வளர்ச்சி அடையாத சூழலில் கர்நாடகாவில் பாஜகவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியவர் எடியூரப்பா. கடந்த 2008-ஆம் ஆண்டில் முதன்முறையாக கர்நாடகாவின் முதலமைச்சராக பொறுப்பேற்ற எடியூரப்பா, 2011 ஆம் ஆண்டில் எழுந்த ஊழல் குற்றச்சாட்டால் அப்பொறுப்பில் இருந்து பதவி விலகினார். 


தற்போது அவரது தலைமையில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் எடியூரப்பாவின் மகன்கள் ஆட்சி நிர்வாகத்தில் பெரிதும் தலையிடுவதாக டெல்லி பாஜக தலைமைக்கு குற்றச்சாட்டுகள் பறந்தன. மேலும் எடியூரப்பாவின் வயது  மற்றும் உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கர்நாடக மாநிலத்திற்கு புதிய முதல்வரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது






பதவியை ராஜினாமா செய்தி பின்பு செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா," தீவிர அரசியலில்  இருந்து விலகப்போவதில்லை. கர்நாடகாவில் பாஜகவின் வளர்சிக்கு தொடர்ந்து பாடுபடுவேன். 90களில் வாஜ்பாய் அமைச்சரவையில் எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், மாநில அரசியலில் கவனம் செலுத்துவதற்கான அதை ஏற்றுக் கொள்ளவில்லை" என்று தெரிவித்தார். 


இருப்பினும், குஜராத், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு போன்ற எந்த மாநிலங்களில்  இளம் தலைவர்களை அடையாளம் காண முடியாமல் பாஜக தவித்து வருகிறது. அதை சரிசெய்யும் ஒரு முயற்சியாகத் தான் தற்போது எடியூரப்பா பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில், அண்ணாமலை நியமனமும் இதே காரணத்திற்காகத் தான். எனவே, மீண்டும் அவரை தீவிர அரசியலில் கொண்டு வர பாஜக தயங்கலாம் என்று கூறப்படுகிறது.         


மேலும், வாசிக்க: 


மேகதாது 'செக்'... தமிழ்நாடு கவர்னராக எடியூரப்பா?


Yediyurappa Resignation: ஏறப்பா... இறங்கப்பா... அதுதான் எடியூரப்பா!