காவிரி நதியில் இருந்து ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு விவசாயத்திற்காக குறிப்பிட்ட அளவு நீரை, வழங்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை செயல்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தின் போது தமிழ்நாட்டிற்கு 5000 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகாவில் தண்ணீர் இல்லை என்று கூறி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுக்கிறது கர்நாடகா அரசு.


காவிரி நதிநீர் பங்கீடு குறித்த சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது என முடிவெடுக்கப்பட்டது.  அதேபோல்,  கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே சிவகுமார் கர்நாடாகா அணைகளில் போதிய தண்ணீர் இல்லை குடிநீர் தேவைக்காக நீர் இருப்பை உறுதி செய்ய வேண்டும், தமிழ்நாட்டிற்கு போதிய நீர் திறந்து விடப்பட்டுள்ளது என குறிப்பிட்டு பேசினார்.  இதுதொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் அம்மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தேவையற்ற பிரச்னைகளை தருவதாக, முதலமைச்சர் சித்தராமையா பேசியிருந்ததும் சர்ச்சையை கிளப்பியது. இதனிடையே, காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்த அவசர மனு மீதான விசாரணை வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.


இந்நிலையில் நேற்றைய தினம், காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தேவையான நீரை திறந்துவிடவும், இது தொடர்பாக மத்திய அரசு வலியுறுத்தவும் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்.பிக்கள், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.


அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், ” கர்நாடகாவில் தண்ணீர் இருக்கிறது ஆனால் தமிழ்நாட்டிற்கு காவிரி மேலாண்மை வாரியத்தின் அறிவுறுத்தல் படி தண்ணீர் தர மறுக்கின்றனர். கிட்டத்தட்ட 54 டி.எம்.சி தண்ணீர் உள்ளது ஆங்காங்கே சின்ன சின்ன அணைகளை கட்டி நீரை நிறுத்தி வைத்துள்ளனர். காவிரி  ஒழுங்காற்று குழு சுமார் 12,500 கன அடி நீர் கொடுக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் வெறும் 5000 கன அடி நீர் கொடுக்க உத்தரவிடப்பட்டது. அதிலும் முழுமையாக இல்லாமல் 3500 கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது. நெருக்கடியான நேரங்களில் தண்ணீரை எப்படி பகிர்ந்து கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் காட்டிய வழிமுறைகளை பின் தொடர்ந்து கொடுத்திருக்கலாம், ஆனால் அதையும் செய்யவில்லை. தொடர்ந்து இது குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்” என குறிப்பிட்டார்.


இதற்கிடையே கர்நாடகா நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட நிபுணர்களுடன் இன்று டெல்லியில் ஆலோசனை மேர்கொள்ள உள்ளனர். இந்த  ஆலோசனை கூட்டம் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெறுகிறது. ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் குறித்து பேச பிரதமர் மோடியிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது. நேரம் ஒதுக்கப்பட்டால், கர்நாடகா நாடாளுமன்ற உறுப்பினர்கள் காவிரி நீர் விவகாரம் குறித்தும், கர்நாடகா அணைகளில் நீர் இருப்பு, தமிழ்நாட்டிற்கு நீர் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை விடுக்கப்போவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.