ஜம்மு காஷ்மீருக்குச் சென்ற சுற்றுலா பயணிகள் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலில் 25 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ராஜஸ்தானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உட்பட கிட்டத்தட்ட 20 பேர் காயமடைந்தனர் என்றும் கூறப்படுகிறது.


ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்:


இன்று ( ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை) ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரைக்கு அருகே  பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தினர். அப்போது சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் தாக்குதல்களுக்கு உள்ளாதனாக கூறப்படுகிறது. தற்போதைய தகவலின்படி 25 பேர் இறந்துள்ளதாகவும், குறைந்தபட்சம் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


பைசரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் சுட்ட தோட்டாவால் சுற்றுலாப் பயணிகளில் ஒருவர் தரையில் கிடப்பதைக் காட்டும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. உள்ளூர்வாசி ஒருவர் மொபைல் கேமராவில் எடுத்த வீடியோவில், பயங்கரவாதிகள் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியபோது காயமடைந்த சுற்றுலாப் பயணி, தரையில் அசையாமல் கிடப்பதைக் பார்க்க  முடிகிறது. பள்ளத்தாக்கின் மேல் பகுதியில் இருந்து பயங்கரவாதிகளின், துப்பாக்கிச் சூட்டின் பலத்த சத்தமும் கேட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. 






மருத்துவமனையில் தீவிர சிகிச்சை:


இதையடுத்து தாக்குதலுக்கு உள்ளானவர்கள் உடனடியாக, மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் பாதுகாப்புப் படையினர் தீவிரமாகத் தேட தொடங்கினர். பயங்கரவாதிகளைக் கண்டுபிடிக்க பெரிய அளவிலான தேடுதல் வேட்டையும் தொடங்கப்பட்டுள்ளது.






பயங்கரவாதிகள் யார்?





தாக்குதல் குறித்து கிடைத்த வட்டார தகவலின்படி, லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய TRF (தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்)  அமைப்பினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இரண்டு முதல் மூன்று தாக்குதல்காரர்கள் பாதுகாப்பு படையினர் சீருடையில் வந்து, சுற்றுலாப் பயணிகள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. 


ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர்:


ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறுகையில், "இறப்பு எண்ணிக்கை இன்னும் உறுதியாகவில்லை, எனவே அந்த விவரங்களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. நிலைமை தெளிவாகும்போது அவை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படும். "நான் நம்பமுடியாத அளவிற்கு அதிர்ச்சியடைந்துள்ளேன்.  இந்த தாக்குதல் ஒரு அருவருப்பானது. இந்த தாக்குதலை நடத்தியவர்கள் விலங்குகள், மனிதாபிமானமற்றவர்கள் மற்றும் அவமதிப்புக்கு தகுதியானவர்கள். கண்டன வார்த்தைகள் போதாது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று அவர் கூறினார்.


பிரதமர் மோடி:




பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளன. இந்த கொடூரமான செயலுக்குப் பின்னால் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் தப்ப முடியாது! அவர்களின் தீய திட்டம் ஒருபோதும் வெற்றி பெறாது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் உறுதியை அசைக்க முடியாதது, அது இன்னும் வலுவடையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.