Hemant Soren: ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கி, அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்:


நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரனை,  அமலாக்க இயக்குனரகம் இந்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு அவருக்கு ஜாமின் வழங்கி, மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான ஆவணங்கள் கிடைத்ததும், அவர் சிறையிலிருந்து விரைவில் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஹேமந்த் சோரன் கைது செய்யப்படுவதற்கு முன்பு 30 மணிநேரம் "கண்டுபிடிக்க முடியாதவர்" என்று அறிவிக்கப்பட்டார். ராஞ்சியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவர் தான் வகித்து வந்த முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 இன் விதிகளின் கீழ் சோரன் கைது செய்யப்பட்டார். PMLA இன் பிரிவு 19, ஒரு தனிநபரை கைது செய்யும் அதிகாரத்தை அமலாக்கத்துறைக்கு வழங்குகிறது.


ஹேமந்த் சோரனுக்கு எதிரான வழக்கு என்ன?


ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள 8.5 ஏக்கர் நிலத்தை ராஞ்சியில் உள்ள வருவாய் துணை ஆய்வாளர் ஒருவருடன் ஹேமந்த் சோரன் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ளார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பல நில அபகரிப்பு புகார்களில் பல முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்திய போது ED வழக்கில் ஆதாரங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. வருவாய் துணை ஆய்வாளர் பானு பிரதாப் பிரசாத், சோரன் உள்ளிட்ட பிறருடன் கைகோர்த்து போலி ஆவணங்களை தயாரித்து சொத்துகளை அபகரித்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இந்த விவகாரத்தில் ED கடந்த ஆண்டு ஜூன் மாதம் எஃப்ஐஆர் பதிவு செய்து, அதன் அடிப்படையில் சோரன் கைது செய்யப்பட்டார்.


ஹேமந்த் சோரன் தரப்பு விளக்கம்:


ஆனால், மத்திய அரசின் பேச்சை கேட்டு அமலாக்கத்துறை செயல்படுவதாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தான் கைது செய்யப்பட்டு இருந்ததாகவும் ஹேமந்த் சோரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போதைய சூழலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைமையில், கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது கட்சியை சேர்ந்த சம்பாய் சோரன் முதலமைச்சர் பதவியை வகித்து வருகிறார். ஹேமந்த் சோரனின் மனைவியான கல்பனா முர்மு, அண்மையில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.