கர்நாடகாவில் நடைபெற்ற சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. 


கர்நாடகாவின் காவேரி மாவட்டத்தில் இன்று அதிகாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. அங்குள்ள புனே-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் வேன் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 


விரைந்து வந்த போலீசார் மீட்பு படையினர் உதவியுடன் இறந்தவர்கள் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்து தொடர்பாக நடந்த விசாரணையில் வெளியான முதற்கட்ட தகவலின்படி, இறந்தவர்கள் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுக்காவில் உள்ள எம்மிஹட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் பெலகாவி மாவட்டத்தில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்துள்ளனர்.


மோதிய வேகத்தில் வேன் முழுவதுமாக சிதைந்ததால் உயிரிழந்தவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.