ஜெஇஇ மெயின் 2022 (JEE Main 2022) தேர்வில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த சினேகா பரீக் என்ற மாணவி 100% மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.


ஜெஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு என்பது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்திய அரசாங்கம் மற்றும் மத்திய மேல்நிலை கல்வி வாரியத்தால் (சிபிஎஸ்இ) நடத்தப்டும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாகும். இந்தத் தேர்வு பல்வேறு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளைப் படிக்க விரும்பும் மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது.


இந்நிலையில் ஜெஇஇ மெயின் 2022 (JEE Main 2022) தேர்வில் சினேகா பரீக் என்ற மாணவில் 100% மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். அது மட்டுமல்லாது அந்த 14 பேரில் சினேகா பரீக் மட்டுமே பெண் என்பது குறிப்பிடத்தக்கது. தனது உழைப்பும் வெற்றியும் விருப்பமும் குறித்து அவர் அளித்துள்ள பேட்டி மாணவர்களுக்கு உத்வேகம் தருவதாக அமைந்துள்ளது.


தினமும் 13 மணிநேரம் படிப்பேன்:
சினேகா பரீக்கின் சொந்த ஊர் அஸ்ஸாம். ஜெஇஇ மெயின் 2022 (JEE Main 2022) செஷன் 1 தேர்வை எழுதியவர்களில் நாடு முழுவதும் 14 பேர் மட்டுமே 100% எடுத்துள்ளனர். இவர்களில் சினேகா பரீக்கும் ஒருவர். மிகப்பெரிய பெருமையை சாதனையை மிகச்சிறிய வயதில் அவர் சாத்தியமாக்கியுள்ளார்.


அது எப்படி என்று அவரே கூறியுள்ளார். நான் தினமும் 12 மணி நேரம் முதல் 13 மணி நேரம் வரை உழைத்தேன். மூன்று ஆண்டுகளாக இதற்காகத் தயாராகிறேன். தொலைக்காட்சி, பொழுதுபோக்கு, சமூக வலைதளங்கள் என எதன் பக்கமும் நான் திரும்பவேயில்லை. குவஹாட்டியைச் சேர்ந்த பரீக், ஜெஇஇ மெயின் ஷெஷன் 2வை எழுதப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். தன்னைப் பொருத்தவரை தேசத்தில் ஐஐடி அனைத்துமே தனிச்சிறப்பானது. அதனால் எவற்றில் எது கிடைத்தாலும் எனக்கு மகிழ்ச்சி. எனக்கு பிடெக் (சிஎஸ்) கணினி அறிவியல் படிப்பதற்கே ஆசை. அது எந்த ஐஐடியில் கிடைக்கிறதோ அங்கு சேர்ந்து படிப்பேன். எனது தனிப்பட்ட விருப்பம் மும்பை ஐஐடி. அங்கு கிடைத்தால் கூடுதல் மகிழ்ச்சியடைவேன் என்று கூறினார். 


பயிற்சியின்போது அவர் குவஹாட்டி ஆலன் மையத்தில் சேர்ந்து படித்துள்ளார். அதுதவிர இயற்பியல் பாடத்திற்காக H C Verma புத்தகத்தையும், வேதியியல் பாடத்திற்காக சுதர்சன் குஹா புத்தகத்தைப் பின்பற்றியுள்ளார். இதுதவிர மாக் டெஸ்ட் நூற்றுக்கணக்கில் எழுதியுள்ளார். ஜெஇஇ அட்வான்ஸ்ட் தேர்விலும் தான் அதேபோன்று மாக் டெஸ்ட் முறையைப் பின்பற்ற இருப்பதாகக் கூறியுள்ளார்.


இலக்குகளை அடைய வேண்டும் என்றால் கவனச் சிதறல் இருக்கக் கூடாது. அதுதான் கல்விக்கு மிக முக்கியமானது. இதனை சிநேகாவின் வெற்றி உரக்கச் சொல்கிறது. 


18 வயதான சினேகா சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகளுக்குக் காத்திருக்கிறார். அதிலும் நல்ல மதிப்பெண் பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.