ஜம்மு  காஷ்மீரில் பள்ளிக்கூடத்துக்கு குங்குமம் வைத்துவந்த மாணவியை அடித்து ஆசிரியர் ஒருவர் பரபரப்பைக் கிளப்பியுள்ளார். நிசார் அகமது என்ற அந்த ஆசிரியரை பள்ளிக்கூடம் இடைநீக்கம் செய்துள்ளது.


கதூரியான் பஞ்சாயத்து த்ரமன் நடுநிலைப் பள்ளியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.


சட்டத்தின் படி ஒரு குழந்தையைத் துன்புறுத்துதல் என்பது, இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 323, 325, 352 மற்றும் 506ன் கீழ் குற்றமாகும். மேலும் சிறார் நீதிச் சட்டப்பிரிவு 23ன் படி குழந்தைகள் மீது குற்றம் இழைக்கும் நபருக்கு 6 மாதங்கள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அடுத்த உத்தரவு வரும் வரை ஆசிரியர் நிசார் அகமதுவை இடை நீக்கம் செய்துள்ளது. ரஜோரி மாவட்டத்தின் மூத்த காவல் கண்காணிப்பாளர் முகமது அஸ்லாம் சவுத்ரி, "நாங்கள் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம். புகார் அளித்த சிறுமி தன்னை ஆசிரியர் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் அடித்ததாகவும் கூறியுள்ளார். தான் நெற்றியில் திலகம் இட்டு வந்ததாலேயே அவர் தன்னை அடித்ததாக அவர் கூறியுள்ளார். நாங்கள் ஆசிரியர் மீது வழக்கு தொடர்ந்துள்ளோம். விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்" என்றார். 


அண்மையில் கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவுக்கூரத் தக்கது.


பள்ளிகளில் ஹிஜாப் அணிய கூடாது என்று அரசின் உத்தரவை எதிர்த்து தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது. அதில் பள்ளிகள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அவசியமில்லை என்று தெரிவித்துள்ள கர்நாடக உயர் நீதிமன்றம், ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்குகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடைவிதித்தது செல்லும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் ஆகியோர் இந்தத் தீர்ப்பை அளித்தனர்.


கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவித் துண்டு, நீலத் துண்டு என சாதி, மத அடையாளங்கள் கூடாது என கர்நாடக கல்வித் துறையும் தெரிவித்தது.


இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் நெற்றியில் திலகமிட்டுவந்த மாணவியை ஆசிரியை ஒருவர் அடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளில் மத அடையாளம் எதுவுமே கூடாது என்பது தான் சமூக ஆர்வலர்களின் பார்வையாக உள்ளது.