ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக பீட்டா உள்ளிட்ட அமைப்பு தொடர்ந்த வழக்கு விசாரணையை நவம்பர் 29-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.


ஜல்லிக்கட்டு போட்டி வணிக நோக்கமானது என்ற மனுதாரரின் வழக்கறிஞர் வாதிட்டபோது, ஜல்லிக்கட்டு போட்டிக்கு கிராமங்களில் டிக்கெட் எதுவும் விற்பனை செய்யப்டுவதில்லையே என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


விலங்குகளை முன்னிலைப்படுத்தி விளையாடப்படும் விளையாட்டுகள் விலங்குகள் வதை தடுப்புச் சட்ட விதிகளை மீறுகின்றனவா என்பது உள்பட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற வேண்டும் என மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா வாதம் முன்வைத்தார். அவர் மேலும், "ஜல்லிக்கட்டு, சக்கடிக்கு ஆதரவாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய மாநில அரசுகள் கொண்டு வந்த சட்டங்கள் அரசியல் சாசனத்துக்கு எதிரானவையா? 


பாரம்பரிய நாட்டு மாடு இனங்களை பாதுகாக்கவும், அவற்றின் இன வளர்ச்சிக்கும் ஜல்லிக்கட்டு சட்டம் உதவுகிறதா?  ஜல்லிக்கட்டை கலாச்சாரம் என தமிழ்நாடு கருத முடியுமா?" எனவும்  கேள்வி எழுப்பினார்.
விலங்குகளுக்குத் தீங்கு இழைக்கப்படக் கூடாது என்பதே விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் நோக்கமாகும் என்றும் லூத்ரா தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார்.


முன்னதாக, மனிதர்களுக்கான சமமான உரிமைகள் விலங்குகளுக்கு இல்லை; பாம்பு, கொசு உள்ளிட்டவற்றை எந்த வதையில் சேர்ப்பது?  என்று நீதிபதி ஜோசப் கேள்வி எழுப்பினார். அவர் மேலும், "ஒரு கொசு கடிக்கப் போகும்போது அதை கொன்றுவிட்டால் விலங்கு வதை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக் வேண்டுமா? விலங்குகள் மீது இரக்கம் உள்ளிட்டவைதான் இருக்க வேண்டும், வழக்கை திசை திருப்பாதீர்கள்" என்றார்.


உச்சநீதிமன்ற உத்தரவால் தடை செய்யப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில் ஒன்றிய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து தமிழக அரசு சட்டம் இயற்றி இருந்தது.


காதலையும் வீரத்தையும் போற்றிப்பாடிய தொன்மையான தமிழ் இலக்கியங்களில் ஜல்லிகட்டு 'ஏறுதழுவுதல்' எனும் பெயரில் இடம்பெற்றுள்ளது. 


"பன்னெடுங்காலமாக தமிழர்களுக்கு ஏறுதழுவுதல் மீதான  பிணைப்பு இந்நாள் வரைக்கும் தொடர்வதை இது காட்டுகிறது. ஸ்பெயின் போன்ற நாடுகளில் நடத்தப்பட்டு வரும் Bull fighting எனும் மாட்டுச் சண்டை விளையாட்டுகள் பெரும்பாலும் வணிக நோக்கில் விளையாடப்படுகின்றன. 


ஆனால், ஜல்லிகட்டு அப்படியில்லாமல் கலாச்சார நிகழ்வாக கடைபிடிக்கப்படுகிறது. இது உள்ளூர் கிராம நிர்வாகத்தால் மாவட்ட ஆட்சியர், வருவாய் அதிகாரிகள், கால்நடைத்துறை, மருத்துவர்கள் ஆகியோரின் மேற்பார்வையிலேயே நடத்தப்படுகிறது. 


வெளிநாடுகளில் மாடுபிடிச் சண்டையில் மாடோ அல்லது மனிதரோ உயிரிழப்பது பொதுவானதாகவும் அந்த விளையாட்டின் ஓர் அங்கமாகவும் உள்ளது. ஆனால், ஜல்லிக்கட்டு கால்நடைகளின் வளத்தை உயர்த்தவும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் கிராமங்கள், அதற்காக மாடுகளை வளர்க்கும் கிராமங்களின் பொருளாதாரத்தையும் உயர்த்துவதற்குமான ஆதாரமாக உள்ளது. 


ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்த அரசாணையால் நாட்டு மாடுகளின் இனப்பெருக்கம் மற்றும் தமிழர்களின் கலாச்சார பாரம்பரியம் பாதுகாக்கப்படுகிறது.


ஐக்கிய நாடுகள் சபையின் Convention of Protection of Cultural and Societal Rights, 1948ன் படி ஜல்லிக்கட்டை அனுமதிப்பது அவசியம்.  போலோ போன்ற விளையாட்டுகளில் பயன்படுத்தப்படும் குதிரைகளுக்கு ஊக்கமருந்து கொடுக்கப்படுகிறது. ஆனால், ஜல்லிகட்டில் காளைகளுக்கு எந்த ஊக்க மருந்தும் கொடுக்கப்படுவதில்லை.


மேலும் ஜல்லிகட்டானது ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் பங்குபெறும் நிகழ்வாக இல்லாமல் தமிழர்கள் அனைவரும் பங்குகொள்ளும் கலாச்சார நிகழ்வாக உள்ளது.  ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பாரம்பரிய மொழி, அறிவு, வாழ்க்கைமுறை, பழக்க வழக்கங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் அடுத்த தலைமுறைக்கு அது கடத்தப்பட வேண்டும் என்பதையும் UNESCO வலியுறுத்துகிறது என ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழர்களின் பாரம்பரிய உரிமையை நிலைநாட்ட வேண்டி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இவ்வழக்கில் இடையீட்டு  மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.