டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்குச் சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் மோசமான வானிலையால் விமான சேதமடைந்த நிலையில் விமானியின் சாதுர்யத்தால் 227 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
புழுதிப்புயல் மழை:
டெல்லியில் நேற்று அடித்த புழுதிப்புயல் மற்றும் மழையின் காரணமாக விமானப்போக்குவரத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்ப்பட்டது, விமானம் புறப்பாடு மற்றும் வருகையில் தாமதம் ஏற்ப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர். விமான போக்குவரத்தும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டது.
சேதமான விமானம்:
இந்நிலையில் டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு இண்டிகோ விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 227 பயணிகளுடன் ஸ்ரீ நகரை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. பலத்த காற்று மற்றும் மழையினால் விமானமானது டர்புலன்ஸ்சில் சிக்கியது, மேலும் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையின் காரணமாக விமானத்தில் முன் பகுதி சேதமடைந்தது. இதனால் விமானி உடனடியாக ஸ்ரீ நகர் விமான நிலையத்துக்கு தகவல் கொடுத்தார் இதையடுத்து விமானது அவசர அவசரமாக ஸ்ரீ நகர் விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானியின் சாதுர்யமான கையாடலால் விமானத்தில் இருந்த 227 பத்திரமாக தரையிறங்கினார். ஆலங்கட்டி மழையினால் விமானத்தின் முன்பகுதி நன்கு சேதமடைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இண்டிகோ அறிக்கை:
இந்த சம்பவம் தொடர்பாக இண்டிகோ விமானம் அளித்துள்ள அறிக்கையில் "டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு இயக்கப்படும் இண்டிகோ விமானம் 6E 2142, வழியில் திடீரென ஆலங்கட்டி மழையை சந்தித்தது. விமானம் மற்றும் கேபின் குழுவினர் நிறுவப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்றினர், மேலும் விமானம் ஸ்ரீநகரில் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானம் வந்த பிறகு, விமான நிலையக் குழு பயணிகளின் நலனுக்கும் வசதிக்கும் முன்னுரிமை அளித்து, அவர்களுக்கு உதவியது. தேவையான ஆய்வு மற்றும் பராமரிப்புக்குப் பிறகு விமானம் விடுவிக்கப்படும்," என்று விமானம் நிறுவனம் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது .
திரிணாமுல் எம்.பிக்கள்:
இந்த விமானத்தில் திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) டெரெக் ஓ'பிரையன், சகாரிகா கோஸ், நதிமுல் ஹக், மம்தா தாக்கூர் மற்றும் மனாஸ் பூயான் ஆகியோர் அடங்கிய எம்.பிக்கள் குழு விமானத்தில் இருந்தது.
இது குறித்து பதிவிட்டுள்ள சகாரிகா கோஸ் "அது ஒரு மரண அனுபவமாக இருந்தது. என் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்தேன். மக்கள் அலறிக் கொண்டிருந்தார்கள், பிரார்த்தனை செய்தார்கள், பீதியடைந்தார்கள். அந்த வழியாக எங்களை அழைத்துச் சென்ற விமானிக்கு பாராட்டுகள். நாங்கள் தரையிறங்கியபோது விமானத்தின் மூக்கு வெடித்திருப்பதைக் கண்டோம்," என்று கோஷ் கூறினார்.