சிக்கிம் மாநிலத்தில் சாலை விபத்தில் ராணுவ வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர். வடக்கு சிக்கிமில் உள்ள ஜெமாவில் ராணுவ டிரக் சாலை விபத்தில் சிக்கி 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாலை வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.




சாட்டன் பகுதியிலிருந்து தாங்கு எனும் பகுதியை நோக்கி  3 வாகனங்கள் அடங்கிய கான்வாய் சென்றபோது, ஜெமா எனும் பகுதியில் கூர்மையான வளைவை தவிர்க்க முயன்ற ஒரு வாகனம் மட்டும் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், 4 ராணுவ வீரர்களை காயங்களுடன் மீட்டு விமானம் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதேநேரம், துருதிர்ஷ்டவசமாக, மூன்று ஜூனியர் கமிஷன்ட் அதிகாரிகள் உட்பட 16 வீரர்கள் விபத்தில் உயிரிழந்ததாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர்  பதிவில்,  வடக்கு சிக்கிமில் நடந்த சாலை விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. அவர்களின் சேவை மற்றும் அர்ப்பணிப்புக்காக தேசம் ஆழ்ந்த நன்றியுடன் உள்ளது. உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.