Toll Collection: நாடு முழுவதும் அனைத்து சுங்கச்சாவடிகளை அகற்றி, ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டணை வசூலை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.


நாடு முழுவதும் முக்கியமான அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு 40 முதல் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஏராளமான சுங்கச்சாவடிகள் இருக்கின்றன.


ஜிபிஎஸ் மூலம் டோல் கட்டண சேவையா?


சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதை தடுக்க பாஸ்டேக் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது, பாஸ்டேக் இல்லாத வாகனங்களே இல்லை. பாஸ்டேக்கிறகு ரீசார்ஜ் செய்து வாகனங்கள் சுங்கச்சாவடிகளை கடந்து வருகின்றன.  இந்த நிலையில், சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் முறையில் சில மாற்றங்கள் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


அதன்படி,  தேசிய நெடுஞ்சாலைகளில் ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல் முறையை அமல்படுத்த  மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக ரயில்வே துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். ஜிபிஎஸ் அடிப்படையிலான மின்னணு கட்டண வசூல் முறை, தானியங்கி வாகன எண் அங்கீகரிக்கும் கருவி (automatic number plate recognition (ANPR) மூலம் செயல்படுகிறது.


இது, நெடுஞ்சாலைகளில் நிறுவப்பட்ட கேமராக்கள் மூலம் வாகனங்களின் எண்ணை ஸ்கேன் செய்து கட்டணத்தை செலுத்தும். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் ரெக்கார்டுகளை அரசு தொடர்ந்து கண்காணிக்க முடியும்.


எப்படி செயல்படும்?


மேலும், பயணிக்கும் வாகனங்களின் வழித்தடத்தையும், அவர்கள் கடக்கும் சுங்கச்சாவடிகளை இந்த கருவி தொடர்ந்து கண்காணிக்கும். நீங்கள் கடந்த சென்ற சுங்கச்சாவடிகளை இது அடையாளம் கண்டு அதற்கேற்ப சுங்கச்சாவடி கட்டணங்களை கணக்கிடுகிறது. அதாவது, வாகனங்கள் எந்த இடத்திற்கு எல்லாம் பயணம் செய்துள்ளது என்பதை கண்டுபிடித்து அதன் மூலம் ஜிபிஎஸ் பயன்படுத்தி நேரடியாக சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


இந்த ஜிபிஎஸ் டோல் கட்டண முறை இந்தியாவில் நெடுஞ்சாலை பயண அனுபவத்தை முற்றிலும் மாற்றும். மேலும், டோல் கட்டண முறைகேடுகளை தவிர்ப்பதற்கு இந்த முறையை மத்திய அரசு கொண்டு வரப்பட உள்ளது.  இந்த ஜிபிஎஸ் கருவி மூலம் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து தானாகவே ஒவ்வொரு டோல் கேட்டை கடக்கும் போது கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 


எப்போது அமலாகும்?


இதுகுறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், "நாடு முழுவதும் சுங்கச்சாவடிகள் மூலம் அரசுக்கு ரூ.40,000 கோடி வருவாய் கிடைக்கிறது. நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண முறை அறிமுகப்படுத்த உள்ளோம்.  ஆறு மாதங்கள் இந்த தொழில்நுட்பத்தை நாங்கள் கொண்டு வருகிறோம். 2018-19ஆம் ஆண்டில் சுங்கச்சாவடிகளில் வாகனங்களின் சராசரி காத்திருப்பு நேரம் 8 நிமிடங்கள் இருந்தது. 2020-21ஆம் ஆண்டில்  பாஸ்டேக் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், வாகனங்களின் காத்திருப்பு நேரம் 47 வினாடிகள் குறைந்துள்ளன" என்றார்.