IND -PAK Airspace: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்கதடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் விமானங்களுக்கு ”நோ”

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல் அரங்கேறிய சில நாட்களுக்குப் பிறகு, பாகிஸ்தானால் பதிவுசெய்யப்பட்ட, இயக்கப்படும் அல்லது குத்தகைக்கு விடப்பட்ட அனைத்து விமானங்களுக்கும் தனது வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கும் அறிவிப்பை மத்திய அரசுவெளியிட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, “பாகிஸ்தானில் பதிவுசெய்யப்பட்ட விமானங்கள் மற்றும் பாகிஸ்தான் விமான நிறுவனங்கள்/ஆபரேட்டர்களால் இயக்கப்படும்/சொந்தமான அல்லது குத்தகைக்கு விடப்பட்ட விமானங்கள், இராணுவ விமானங்கள் உட்பட அனைத்திற்கும் இந்திய வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

எத்தனை நாட்களுக்கு தடை:

பாகிஸ்தான் விமானங்களுக்கான இந்த கட்டுப்பாடு ஏப்ரல் 30 முதல் மே 23, 2025 வரை அமலில் இருக்கும், அந்த காலகட்டத்தில் எந்த பாகிஸ்தானிய விமானமும் இந்திய வான்வெளிக்குள் நுழைய அனுமதிக்கப்படாது. இந்திய விமான நிறுவனங்களுக்குச் சொந்தமான மற்றும் இயக்கப்படும் அனைத்து விமானங்களுக்கும் தனது வான்வெளியை பாகிஸ்தான் அரசு ஏற்கனவே மூடியது குறிப்பிடத்தகக்து.

பஹல்காம் தாக்குதல்:

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த காட்டுமிராண்டித்தனமான தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகள் 25 பேர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இதனால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS), ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த கொடூரமானதீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்பு சூழ்நிலை மற்றும் எதிர்கால நடவடிக்கை குறித்து விவாதித்தது. அதைதொடர்ந்து முக்கிய அமைச்சர்கள் அடங்கிய உயர்மட்ட ஆலோசனைக் குழுவும் நடைபெற்றது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற முதல் கூட்டத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்தது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது, அட்டாரி எல்லையை மூடுவது, பாகிஸ்தானியர்களின் விசாக்களை ரத்து செய்வது, அதன் பல யூடியூப் சேனல்கள் மற்றும் எக்ஸ் பக்கங்களை முடக்குவது, தூதரகங்களில் ஊழியர்களைக் குறைப்பதன் மூலம் பாகிஸ்தானுடனான ராஜதந்திர உறவுகளை குறைத்தது. இதனால் அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படுவது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்தது.