பிரதமர் மோடியின் புகழ் தரவரிசை கடந்த ஒரு வருடத்தில் 66 சதவிகிதத்திலிருந்து 24 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாக இந்தியா டுடே சர்வே கனித்துள்ளது. இந்தியா டுடேயின் ‘மூட் ஆஃப் தி நேஷன்’ சர்வேயில் இதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது. 


இந்தச் சரிவுக்கான முக்கிய காரணமாக கொரோனா பெருந்தொற்று கூறப்படுகிறது.  கொரோனா பெருந்தொற்றை பிரதமர் கையாண்ட விதம்தான் அவரது பாப்புலாரிட்டியைச் சரியச் செய்ததாகக் கூறப்படுகிறது.’கொரோனா முதல் அலையை மோடி கையாண்ட விதம் அருமை என 73 சதவிகிதம் பேர் அங்கீகரித்திருந்தாலும் இரண்டாம் அலை காலத்தில் அவர் சுதாரித்துக்கொள்ளவில்லை’ என இந்தியா டுடே அறிக்கை கூறியுள்ளது.மேலும் தேர்தல் பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றவர்களில் 27 சதவிகிதம் பேரிலிருந்து கொரோனா தொற்றியுள்ளது என்றும் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாத 26 சதவிகிதம் பேரிலிருந்து கொரோனா தொற்றியுள்ளது என்றும் அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




சர்வே நடத்தப்பட்டவர்களில் 71 சதவிகிதம் பேர் வரை அரசு குறிப்பிட்ட எண்ணிக்கையை விட அதிக கொரோனா மரணம் நிகழ்ந்ததுள்ளதாக நம்புகின்றனர். அதே சமயம் பங்கேற்றவர்களில் 44 சதவிகிதம் பேர் இந்தச் சுகாதாரப் பேரழிவுக்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இருவருமே பொறுப்பு என நம்புகின்றனர். மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மிகப்பெரிய சறுக்கலாக விலைவாசி ஏற்றமும் பணவீக்கமும் இருந்ததாக 29 சதவிகிதம் பேர் குறிப்பிட்டுள்ளனர். 23 சதவிகிதம் பேர் வேலைவாய்ப்பின்மைதான் மோடி அரசின் பெரும் பலவீனமாகக் குறிப்பிட்டுள்ளனர். பிரதமர் பதவிக்கான மக்களின் சாய்ஸில் மோடிக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி அதித்யநாத் இருக்கிறார். மூன்றாவது இடத்தில்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருக்கிறார்.அதுவும் அவருக்கான ஆதரவு 10 சதவிகிதம் மட்டுமே என இந்தச் சர்வே குறிப்பிடுகிறது. 


2020ல் ராகுல்காந்திக்கான புகழ் தரவரிசை 8 சதவிகிதமே இருந்த நிலையில் அது தற்போது அதிகரித்துள்ளது. 2019ல் அதித்யநாத்துக்கு இருந்த ஆதரவு தற்போது 3 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. இருந்தாலும் டாப் 10 முதலமைச்சர்கள் தரப்பட்டியலில் அதித்யநாத்துக்கு கிடைத்திருக்கும் இடம் என்னவோ 11தான். அடுத்த வருடம் உத்திரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் இந்த மதிப்பீடு முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.


இந்த வருடம் இந்தச் சர்வே ஜூலை 10 முதல் 22 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 14000 பேரில் நடத்தப்பட்டது.பங்கேற்றவர்களில் 71 சதவிகிதம் பேர் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள். 29 சதவிகிதம் பேர் நகர்புறத்தைச் சேர்ந்தவர்கள். மொத்தம் 19 மாநிலங்களில் 115 நாடாளுமன்ற மற்றும் 230 சட்டமன்றத் தொகுதிகளில் இந்தக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.