ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையத் தொடங்கும்போதே மருத்துவமனைக்குச் சென்று விட்டால் தீவிர நோய்  நிலைமை ஏற்படுவதைத் தவிர்த்து விடலாம். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான ஃப்ரீலான்ஸ் பத்திரிக்கையாளர் வினய் ஸ்ரீவாஸ்தவா தனது ஆக்சிஜன் அளவு குறைய தொடங்கியவுடன் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கிறார்.

  


கடந்த வெள்ளிக்கிழமை தான் சந்தித்துவரும் மோசமான அவல நிலையை குறித்து ட்விட்டரில் பதிவிட்டார். அப்போது, அவரின் ஆக்சிஜன் அளவு 52 சதவீதம் அளவுக்கு குறைந்தது. கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின்  ஆக்ஸிஜன் அளவு 94-க்கும் கீழே இருப்பது ஆபத்தாக கருதப்படுகிறது. 


ட்விட்டரில் இந்த பதிவு வைரலானதை அடுத்து, உத்தரபிரதேச முதல்வர் அலுவலக ஊடக ஆலோசகருக்கு இந்த தகவல் சென்றது. கூடுதல் தகவல் அளிக்குமாறு ஊடக ஆலோசகரும் அடுத்த நாள்  ட்விட்டரில் பதிலளித்தார். ஆனால், அப்போது ஸ்ரீவாஸ்தவாவின் ஆக்சிஜன்அளவு  31 சதவீதம் அளவுக்கு குறைந்தது. 


சனிக்கிழமை அதிகாலை 4.20 மணிக்கு ஸ்ரீவாஸ்தவாவின் உயிரிழந்த நிகழ்வை அவரின் மகன் ட்விட்டரில் பதிவு செய்தார். "ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்கவில்லை. அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவிட்டோம். எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. ஆம்புலன்ஸ் வாகனத்திற்காக காத்திருக்கிறோம்" என்று பதிவிட்டார். 


உண்மையில், ஸ்ரீவாஸ்தவாவின் வீட்டிலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ள ஷியாமா பிரசாத் முகர்ஜி சிவில் மருத்துவமனை ஆக்ஸிஜன் உற்பத்தி வசதிக்காக காத்திருக்கிறது. நாடு முழுவதும் உள்ள 150 பொது சுகதாரா மையங்களில் பிரத்யேக பிஎஸ்ஏ பிராணவாயு தயாரிப்பு வசதிகளை நிறுவ தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் இதுவும் ஒன்றாகும். இதற்கான டெண்டர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விடப்பட்டது. அதாவது, எட்டு மாத கொரோனா பெருந்தொற்று தாக்குதலுக்குப் பிறகுதான் இந்த முயற்சியை மத்திய அரசு முன்னெடுத்தது என்பதையும் இங்கு நாம் மறந்துவிடக்கூடாது. 


 


 



கொரோனா மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர் - காட்சிப்படம் 





எவ்வாறாயினும், டெண்டர் விடப்பட்டு ஆறு மதங்களுக்குப் பிறகும்,  பிரசாத் முகர்ஜி மருத்துவமனையில் பிராணவாயு தயாரிப்பு வசதிகள் நிறுவப்படவில்லை. ஒருவேளை நிறுவப்பட்டிருந்தால், ஸ்ரீவாஸ்தவா போன்ற போன்ற அப்பாவிகளின் உயிர்கள் இன்று காப்பற்றப்பட்டிருக்கும். லக்னோ நகரத்தில் மட்டும் 44,485 பேருக்கு கொரோன நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதையும் இங்கு நாம் கணக்கில் கொள்ள வேண்டும். 


"என் தந்தையை காப்பாற்றியிருக்க முடியும்" என்று ஹர்ஷித் ஸ்ரீவாஸ்தவா கூறினார். தந்தை கொரோனா தொற்றால் இறந்துவிட்டார். ஆனால், இன்னும் அவருடைய கொரோனா ரிப்போர்ட் வந்து சேரவில்லை. இது முற்றிலும் அரசாங்கத்தின் தவறு" என்றும் பதிவிட்டார். அதேபோன்று, குஜராத் மாநிலம் நவ்சரியில் உள்ள பொது சுகாதார மையத்திலும் இன்றைய தேதியில் பிராணவாயு தயாரிப்பு வசதிகள்  நிறுவப்பட்டிருக்கவேண்டும். ஆனால், தற்போது ஆக்சிஜன் விநியோக தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை தேவைப்படும் பல கோவிட் -19 நோயாளிகளுக்கு அனுமதி மறுத்து வருகிறது.


"ஆக்ஸிஜன் பற்றாக்குறை முழுமையாக உணரப்படுகிறது" என எம்ஜிஜி பொது மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி அவ்னிஷ் டியூப் கூறினார். மேலும், நவ்சரி மாவட்தத்தில் கோவிட்- 19 பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 500 என்றளவில் இருந்தபோதிலும், கடந்த வாரம், தனியார் மருத்துவமையில் 5 கோவிட் -19 நோயாளிகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.   


இந்நேரம் பிராணவாயு தயாரிப்பு வசதிகள்  நிறுவப்பட்டிருந்தால், குஜராத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றான சூரத் மாவட்டத்தின் அவல நிலையை போக்கியிருக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 


 



கொரோனா மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர் - காட்சிப்படம் 


நிதி ஒதுக்கீடு : 


2020 மார்ச் 14-இல், அன்று கொரோனா வைரஸ் பரவலை பெருந்தொற்று என இந்தியா அறிவித்தது. மார்ச் 24 அன்று, கோவிட் - 19 தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் முழுமையான எல்லை மூடலுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்புவிடுத்தார். அடுத்த 3 வாரங்களில் நிலைமையை நாம் கட்டுக்குள் கொண்டு வராவிட்டால், நாடு 21 ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்றுவிடுவதோடு ஏராளமான குடும்பங்கள் அழிந்துவிடும் என்றும் தெரிவித்தார். 10 லட்சத்துக்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் இந்த முழுமையான ஊரடங்கால் சொல்லமுடியாத துயரங்களை அனுபவித்தனர்.  நாட்டின் மருத்துவ அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்த இந்த ஊரடங்கு தேவை என்றும் தெரிவிக்கப்பட்டது.   


2020, அக்டோபர் 21-ஆம் தேதி, மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான மத்திய மருத்துவ சேவைகள் சங்கம், நாடு முழுவதும் உள்ள பொது சுகாதார மையங்களில் 150 பிரத்யேக அழுத்த விசை உறிஞ்சுதல் (பிஎஸ்ஏ) பிராணவாயு தயாரிப்பு வசதிகளை  கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது. இருப்பினும், இதற்கு முறையான நிதி ஒதுக்கீடு செய்யாததால் டெண்டர் செயல்முறை தொடங்கப்படவில்லை.         


இந்நிலையில், இந்தாண்டு ஜனவரி மாதம் 5-ஆம் தேதி, பிரதமரின் அவசரகால மக்கள் உதவி மற்றும் நிவாரண (பிஎம் கேர்ஸ்) நிதி அறக்கட்டளை, நாடு முழுவதும் உள்ள பொது சுகாதார மையங்களில் 162 பிரத்யேக அழுத்த விசை உறிஞ்சுதல் (பிஎஸ்ஏ) பிராணவாயு தயாரிப்பு வசதிகளை நிறுவ ரூ 201.58 கோடியை ஒதுக்கீடு செய்தது. முன்பை விட கூடுதலாக 12 வசதிகளை நிறுவ நிதிஒதுக்கீடு செய்யப்பட்டது. 


”இந்த வசதிகளை நிறுவுவதற்கும், மத்திய மருத்துவ விநியோக விற்பனைக்கூடத்தின் மேலாண்மை கட்டணமாகவும் ரூ 137.33 கோடியும், விரிவான வருடாந்திர பராமரிப்பு கட்டணமாக ரூ 64.25 கோடியும் செலவிடப்படும். முதல் மூன்று வருடங்களுக்கு இந்த மையங்களுக்கு உத்தரவாதம் உண்டு. அடுத்த ஏழு வருடங்களுக்கு, விரிவான வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தத்தின் கீழ் இவை வரும். மருத்துவமனைகள்/மாநிலங்களால் வழக்கமான செயல்பாடுகளும்,  பராமரிப்பும் மேற்கொள்ளப்படும், விரிவான வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தம் முடிந்த பின்னர் ஒட்டுமொத்த செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பை மருத்துவமனைகள்/மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டது.


இதற்கிடையே, கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் பரவியுள்ள நிலையில், பிரதமர்-கேர்ஸ் நிதியிலிருந்து மேலும் 100 பிராணவாயு தயாரிப்பு வசதிகள் நிறுவப்படும் என்று மோடி அரசு  கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.  அந்த செய்திக் குறிப்பில், ”கடந்த ஆண்டு  ஒப்பந்தங்கள் வழங்கப்பட்ட 162 பிராணவாயு தயாரிப்பு வசதிகளை விரைவில் முடிக்க கூர்மையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்று கூறப்பட்டது.



நரேந்திர மோடி - காட்சிப் படம்


 


தாமதத்திற்கு காரணம் என்ன? 


Scroll.in தளம் அசாம், பீகார், சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், ஜார்க்கண்ட், கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 14 மாநிலங்களில் உள்ள மருத்துவமனை அதிகாரிகளுடன் பேசியுள்ளது. ஒப்பந்தங்களை பெற்ற நிறுவனங்கள் தான் தாமதத்திற்கு காரணம் என்று பெரும்பாலான அதிகாரிகள் குற்றம்சாட்டினர். மருத்துவமனை அதிகாரிகள் வழங்கிய தகவல்கள் அடிப்படையில்,    Uttam Air Products, Airox Technologies and Absstem Technologies ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு இந்த ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதை  Scroll.in தளம் கண்டறிந்துள்ளது.   


உத்தரபிரதேசத்தில், 14 மருத்துவமனைகளில் ஒன்று கூட ஆக்சிஜன் ஆலை செயல்படுவதாக தெரிவிக்கவில்லை.




லக்னோ ஷியாமா பிரசாத் முகர்ஜி சிவில் மருத்துவமனை அதிகாரி  எஸ்.ஆர். சிங், "தயாரிப்பு ஆலையை நிறுவிய பின் ஒப்பந்த நிறுவனத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை" என்று குற்றம் சாட்டினார்."அதற்குப் பிறகு அவர்கள் எதுவும் செய்யவில்லை, நாங்கள் எங்கள் சொந்த முயற்சியில் குழாய்களை இணைத்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்" என்றும் தெரிவித்தார். மீரட்டின் எல்.எல்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி ஞானேந்திர குமார்  “ ஆலைகள் நிறுவ தளத்தை ஏற்பாடு செய்து கொடுத்தோம். ஆனால் இயந்திரம் இன்னும் வரவில்லை. நிறுவனத்தை பல முறை செல்பேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் எந்த பதிலும் இல்லை” என்று கூறினார்.  


இந்த இரண்டு ஒப்பந்தங்களையும், டெல்லியில் பதிவு செய்யப்பட்ட Absstem Technologies நிறுவனம் பெற்றது. குஜராத்தின் நவ்சாரியில் உள்ள எம்.ஜி.ஜி பொது மருத்துவமனை ஒப்பந்தத்தையும் இதே நிறுவனம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கான ஆவணங்கள் மருத்துவமனை காட்ட முன்வரவில்லை. "நாங்கள் அவர்களை தொடர்ந்து அழைக்கிறோம். எந்த பலனும் இல்லை," என்று மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி அவ்னிஷ் டியூப் கூறினார். அதே சமயம், அவுரங்கபாத் தலைமையிடமாக கொண்டு இயங்கும்  Airox Technologies நிறுவனம் மருத்துவமனை அதிகாரிகளை குற்றம் சாட்டியுள்ளது. காந்திநகர் மருத்துவமனையில் பிராணவாயு தயாரிப்பு ஆலை தயாரிக்கும் ஒப்பந்தத்தை பெற்ற Uttam Air Products நிறுவனத்தை இந்திய மருத்துவ சேவைகள் சங்கம் தடை விதித்தது. ஒப்பந்தத்தை வென்ற பிறகு நிறுவனம் தனது பாதுகாப்பு வைப்புத்தொகை மற்றும் ஒப்புதல் கடிதங்களை சமர்ப்பிக்கவில்லை என்று மருத்துவ சங்கம் தெரிவித்தது. 


ஆக்சிஜன் பற்றாக்குறை இந்தியாவில் இறப்பு விகிதத்தை அதிகப்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது .


India is running out of oxygen, Covid-19 patients are dying – because the government wasted time என்ற தலைப்பில் இந்த கட்டுரை scroll.in செய்தி தளத்தில் வெளியானது.