நாட்டில் கொரோனா பாதிப்பது கடந்த சில வாரங்களகவே அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதிப்பானது 6 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. நேற்று முன்தினம் வரை 5,335-ஆக இருந்த கொரோனா பாதிப்பு, நேற்று 6,050-ஆக அதிகரித்துள்ளது. 


கொரோனா


கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை நிலைகுலைய வைத்த கொரோனா மீண்டும் அச்சத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனாவால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. தடுப்பூசிகள் பயன்பாடு மற்றும் விஞ்ஞான உலகின் தொடர் முயற்சிகள் காரணமாக பெருந்தொற்று ஒரு வழியாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.


இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே இதன் தாக்கம் குறைந்திருந்த நிலையில், தற்போது அது மீண்டும் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. நாட்டில் தினசரி பாதிப்பு உயர்ந்துகொண்டே இருக்கிறது.


6 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு


இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி, நாட்டில் கொரோனா பாதிப்பானது 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 6,050 பேருக்கு புதியதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது நேற்றைய விட 13 சதவீதம் அதிகரித்துள்ளது.






கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 4.41 கோடி பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4.47 கோடியாக உள்ளது. கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, அதில் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி விகிதம் 3.39 சதவிகிதமாக உள்ளது. பாதிப்புக்குள்ளானர்களின் வார விகிதம் 2.90 சதவிகிதமாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4.47 கோடியாக உள்ளது.


உயிரிழப்புகள்


கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 943ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 13 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில்,  28,303-ஆக சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 


அதில் மகாராஷ்ராவில் மூன்றும், கர்நாடகா, ராஜஸ்தானில் தலா இரண்டும், டெல்லி, ஹரியானா, குஜராத், ஹிமாச்சல் பிரதேசம், காஷ்மீர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இறப்புகளும் பதிவாகி உள்ளன.   இதுவரை, 92.18 கோடி முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதுவரை, 220.65 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்  தெரிவித்திருக்கிறது.


இன்று ஆலோசனை


நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது பற்றி மாநில அமைச்சர்களுடன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக்  மாண்டவியா இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக மாநில அமைச்சர்கள், சுகாதார செயலாளர்கள் ஆகியோருடன் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.