ஐந்து மாநில தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஐந்தில் மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியும் மிசோரத்தில் ஜோரம் மக்கள் இயக்கமும் ஆட்சியை பிடித்துள்ளது. 


5 மாநில தேர்தல் முடிவுகள் எதிரொலி:


மக்களவை தேர்தல் நடக்க இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 4 மாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளதால், எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழல் உருவானது.


ஏன் என்றால், INDIA கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கு, நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் தொகுதிகள் ஒதுக்கவில்லை. தெலங்கானாவை தவிர்த்து 4 மாநிலங்களிலும் தனித்தே களம் கண்டது. குறிப்பாக, மத்திய பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்த்தபோதிலும், அக்கட்சிக்கு காங்கிரஸ் ஒரு தொகுதி கூட ஒதுக்கவில்லை. இதுகுறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், வெளிப்படையாகவே தனது அதிருப்தியை பதிவு செய்திருந்தார்.


இப்படிப்பட்ட சூழலில், டிசம்பர் 6ஆம் தேதி, INDIA கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெறவிருந்தது. ஆனால், ஐக்கிய ஜனதா கட்சி தலைவரும் பிகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என அறிவித்தனர். இதனால், INDIA கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 


அதிரடிக்கு தயாராகும் INDIA கூட்டணி:


இந்த நிலையில், வரும் டிசம்பர் 19ஆம் தேதி, INDIA கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரவிருக்கும் மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த கூட்டம், தேசிய தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


3 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்திருப்பதால் மாநில கட்சிகள் செல்வாக்கு செலுத்தும் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு குறைவான தொகுதிகளை ஒதுக்க INDIA கூட்டணியில் இடம்பெற்ற மாநில கட்சிகளின் தலைவர்கள் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.


காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையே வார்த்தை போர் நீடித்து வந்த நிலையில், மூத்த தலைவர்களின் தலையீட்டால் அந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.                                                             


இதையும் படிக்க: யாரும் எதிர்பார்க்கல.. அரசியல் வாரிசை அறிவித்து சர்ப்ரைஸ் கொடுத்த மாயாவதி