11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம்


முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் காலை 11 மணிக்கு, தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்குகிறது. இதில் வளர்ச்சித் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவட்து, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், துணை முதலமைச்சர் உதயநிதிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


தேர்தல் பணிகளை தொடங்கிய திமுக


2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்களை நியமித்து திமுக தலைமை கழகம் அறிவிப்பு.வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கம் உள்ளிட்ட பணிகளை இவர்கள் மேற்பார்வையிட உத்தரவு.


விமானப்படையின் ஆண்டு விழா


இந்திய விமானப்படையின் 92து ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் விமானங்களில் சாகச நிகழ்வு மற்றும் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் விமானப்படையின் ஆயுத பலமும் காட்சிப்படுத்தப்பட்டது.


கலைஞர் நூற்றாண்டு பூங்காவுக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் - அன்புமணி


சென்னை கதீட்ரல் சாலையில் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்ட அரசுக்கு சொந்தமான இடத்தில் வெளிநாடுகளுக்கு இணையான அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் ஏழை மக்கள் செலுத்த முடியாத அளவுக்கு அதிகமாக கட்டணத்தை நிர்ணயிப்பது சரியில்லை. கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும் - அன்புமணி


பாஜக - காங்கிரஸ் கடும் இழுபறி


ஹரியானா மற்றும் ஜம்மு &காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இரண்டு மாநிலங்களிலும் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை கைப்பற்றுவதில், பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் இழுபறி நிலவி வருகிறது.


காஷ்மீரில் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சிக்கக் கூடாது: உமர் அப்துல்லா


காஷ்மீரில் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சிக்கக் கூடாது என தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 70 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றிருந்த நிலையில் தற்போது பா.ஜ.க. முன்னேறியது.


மெக்சிகோவில் மேயர் தலை துண்டித்து படுகொலை


தென்மேற்கு மெக்சிகோவில் உள்ள குவேரா மாகாணத்தில் உள்ள சில்பான்சிங்கோ நகரின் மேயராக, அலெஜான்ட்ரோ ஆர்காஸ் என்பவர் 6 நாட்களுக்கு முன்பு பதவியேற்றார். இந்நிலையில் அவர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.


அமெரிக்கருக்கு சிறை தண்டனை - ரஷ்ய நீதிமன்றம்


உக்ரைன் ராணுவத்தில் இணைந்து போரிட்ட அமெரிக்கர் ஸ்டீபன் ஹப்பர்டு, கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் ரஷ்ய ராணுவத்தினரிடம்  பிடிபட்டார். இதையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு ரஷ்ய நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில், நீதிமன்றம் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.


ஜிம்னாஸ்டிக் நட்சத்திரம் தீபா கர்மாகர் ஓய்வு


 இந்திய ஜிம்னாஸ்டிக் நட்சத்திரம் தீபா கர்மாகர் (31 வயது), சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியின் மகளிர் ஜிம்னாஸ்டிக்கில் பங்கேற்கத் தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குரிய தீபா கர்மாகர், 2016 ரியோ ஒலிம்பிக்சில் 4வது இடம் பிடித்து நூலிழையில் பதக்க வாய்ப்பை நழுவ விட்டது குறிப்பிடத்தக்கது


தென்னாப்ரிக்காவை வீழ்த்தி அயர்லாந்து வெற்றி


தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. அயர்லாந்து அணி நிர்ணயித்த 285 ரன்கள் என்ற இலக்கை துரத்திய தென்னாப்ரிக்கா அணி, 215 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.