நாட்டின் முன்னணி கல்வி நிலைங்களில் ஒன்றாக இருப்பது ஐஐடி. இங்கு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாக ஐஐடி மீது தொடர் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது.


தொடர் தற்கொலைகள்:


அதன் தொடர்ச்சியாக, மும்பையில் உள்ள ஐஐடியில் 18 வயது மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தயுள்ளது. போவாய் பகுதியில் அமைந்துள்ள ஐஐடி கல்லூரியின் மாணவர் விடுதியில் தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.


விடுதியின் 7ஆவது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொண்ட மாணவன் குறிப்பு எதையும் விட்டு செல்லவில்லை. விபத்து மரணம் என போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 


இருப்பினும், ஐஐடி கல்லூரியில் பட்டியல் சாதி மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு காரணமாக அவர் தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாக மாணவர் குழுவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.


இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு வலுச்சேர்க்கும் விதமாக மாணவனின் குடும்பத்தார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். சாதி காரணமாக மாணவன் ஒதுக்கி வைக்கப்பட்டதாகவும் இந்த மோசமான அனுபவங்கள் குறித்து தன்னுடைய சகோதரர் மற்றும் அத்தையிடம் அவர் பகிர்ந்து கொண்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


ஒதுக்கிவைக்கப்பட்ட மாணவன்:


கல்லூரியில் எந்த விதமான பாகுபாடும் காட்டப்படவில்லை என நிர்வாகம் குற்றச்சாட்டுகளை மறுத்த நிலையில், மாணவன் தர்ஷன் சோலங்கியின் குடும்பத்தினர் அவர் துன்புறுத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளனர்.


இதுகுறித்து விரிவாக பேசிய தர்ஷன் சோலங்கியின் சகோதரி ஜான்வி சோலங்கி, "கடந்த மாதம் தர்ஷன் வந்தபோது, ​​அங்கு ஜாதி பாகுபாடு நடக்கிறது என்று என்னிடமும், அம்மா அப்பாவிடமும் சொன்னார். அவர் ஒரு பட்டியலின சாதியைச் சேர்ந்தவர் என்பதை அவரது நண்பர்களுக்கு தெரிய வந்தது.


அதனால் அவர் மீதான அவர்களின் நடத்தை மாறியது. அவர்கள் அவருடன் பேசுவதை நிறுத்தினர். அவருடன் பழகுவதை நிறுத்தினர்" என்றார்.


தர்ஷன் சோலங்கியின் தாய் தர்லிகாபென் சோலங்கி, இதுபற்றி பேசுகையில், "அவர் துயரத்தில் இருந்தார். அவர் சித்திரவதை செய்யப்பட்டார். அதனால் தான் இப்படி செய்திருக்கிறார்" என்றார்.


தர்ஷன் எதிர்கொண்ட துன்புறுத்தல் குறித்து விளக்கிய அவரின் அத்தை திவ்யாபென், "ஒரு மாதத்திற்கு முன்பு தர்ஷன் இங்கு வந்தபோது, ​​நான் இலவசமாகப் படிப்பது பல மாணவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார். மக்கள் பொறாமைப்படுகிறார்கள். அவர்கள் 'நாங்கள் நிறைய பணம் செலவழிக்கும் போது நீங்கள் ஏன் இலவசமாக படிக்கிறீர்கள்' என்று அவர்கள் கேட்கிறார்கள். 


பல மாணவர்கள் என் மீது பொறாமைப்படுகிறார்கள் என்று அவர் என்னிடம் கூறினார். சில நண்பர்களிடம் பேசுவதையும் நிறுத்திவிட்டார்" என்றார்.