மத வழிப்பாட்டு தலங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஒலி பெருக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் கூறி ஒலி பெருக்கிகளை அகற்ற வேண்டும் என்ற கருத்து பல மாநிலங்களில் எழுந்தது. அந்தவகையில் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள இறைவழிப்பாட்டு தளங்களில் ஒலி பெருக்கிகள் அகற்றப்பட்டன. அதுவும், குறிப்பாக மசூதிகளில் உள்ள ஒலி பெருக்கிகளை அகற்ற மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். அதன்படி, அம்மாநிலத்தில் வழிப்பாட்டு தடங்களில் உள்ள 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒலி பெருக்கிகளை நீக்கியுள்ளது. 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒலி பெருக்கிகளின் ஒலி அளவை குறைத்துள்ளது. மேலும், மசூதிகள் தினமும் ஐந்து முறை நடக்கும் வழிபாடு ஒலி பெருக்கி மூலம் ஒலிப்பரப்படுவதால் மக்களுக்கு இடையூராக இருப்பதாக கூறப்பட்டது.


உத்திரப்பிரதேசத்தில் அமல்படுத்தப்பட்ட இந்த நடைமுறையை ராஜ் தாக்கரே வரவேற்றார். ‘ உத்திரபிரதேச மாநிலத்திற்கு யோகி இருக்கிறார்? நமக்கு….? என்று கூறியிருந்தார்.


மகாராஷ்டிராவில் மசூதிகளில் இருக்கும் ஒலி பெருக்கிகள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூராக இருப்பதால் அவற்றை அகற்றவேண்டும் ராஜ்தாக்கரே கடந்த கடந்த மாதம்  2-ம் தேதி மும்பையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். பின்னர், மாநிலத்தின் சில பகுதிகளில் மசூதிக்கு வெளியில் ராஜ் தாக்கரே கட்சியினர் ஒலி பெருக்கியை வைத்து ஹனுமான் பாடல்களை ஒலிக்கச் செய்தனர்.


மசூதிகளில் தினமும் 5 முறை இறைவழிபாடு நடத்துவதை ஒலி பெருக்கிகள்  மூலம் ஒலிப்பரப்ப அவர்களுக்கு அனுமதி யார் வழங்கியது? நாம் ஏன் மற்ற மதத்தினரின் இறைவழிபாட்டை கேட்க வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.


அதோடு வரும் மே 3-ம் தேதிக்குள் மசூதிகளில் இருக்கும் ஒலி பெருக்கியை அகற்றவேண்டும் என்று ராஜ்தாக்கரே மகாராஷ்டிரா அரசுக்கு கெடு வித்திருந்தார். இந்நிலையில், நேற்று நடந்த கூட்டத்தில், மீண்டும் மாநில அரசை எச்சரித்திருக்கிறார்.


ஆனால், மாநில அரசு ஒலி பெருக்கி விவகாரத்தில், மசூதிகள் உள்ளிட்ட இறைவழிபாட்டு தலங்களில் இருக்கும் ஒலி பெருக்கிகளை அகற்றும் திட்டம் ஏதுமில்லை என்று தெரிவித்துள்ளது.


மசூதி மற்றும் கோயில்களில் இருக்கும் ஒலி பெருக்கிகள் அகற்றப்படமாட்டாது. யாரும் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது. அனுமதிக்கப்பட்ட ஒலி அளவில் தான் ஒலி பெருக்கியை பயன்படுத்தவேண்டும் என்பது தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி பெருக்கி பயன்படுத்த அனுமதிக்கப்படாது  என்று ராஜ்தாக்கரேயின் கெடு குறித்து மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் திலிப் வல்சே பாட்டீல் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், மஹாராஷ்டிராவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் அவுரங்காபாத் நகரத்தில் நேற்று பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்குராஜ் தாக்கரே தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய ராஜ் தாக்கரே, மீண்டும் மாநில அரசுக்கு ஒலி பெருக்கி விவகாரத்தில் எச்சரிக்கை விடுத்தார்.


இக்கூட்டத்தில் ராஜ் தாக்கரே பேசுகையில்,``மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து மசூதிகளில் இருக்கும் ஒலி பெருக்கியை வரும் 4-ம் தேதி அகற்றவேண்டும். அப்படி அகற்றவில்லையெனில்லை இரண்டு மடங்கு சத்தத்துடன் மசூதிக்கு வெளியில் அனைத்து இந்துக்களும் ஹனுமான் சாலிகா பாட வேண்டும். மே 3-ம் தேதி ரம்ஜான் பண்டிகை. எனவே அதை சீர்குலைக்க விரும்பவில்லை. ஆனால் 4-ம் தேதிக்கு பிறகு மசூதிகளில் உள்ள ஒலி பெருக்கிகளை அகற்றவில்லை என்றால், பிறகு நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். அனைத்து வழிப்பாட்டு தலங்களிலும் உள்ள ஒலி பெருக்கிகளை அகற்றலாம். ஆனால், முதலில் மசூதிகளில் உள்ள ஒலி பெருக்கியை அகற்ற வேண்டும்.


உத்திரபிரதேச மாநிலத்தில் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும்போது, ஏன் மஹாராஷ்டிராவில் முடியாதா? இந்த விவகாரத்தில் எங்களுடைய முடிவை மாற்ற முடியாது. நான் திரும்பவும் சொல்கிறேன் ஒலி பெருக்கி பிரச்னை மத பிரச்னை கிடையாது. இது சமூக பிரச்னையாகும்.  நீங்கள் இதனை மதப்பிரச்னையாக்கினால் உங்கள் வழியிலேயே பதிலடி கொடுப்போம். மகாராஷ்டிராவில் வன்முறையை ஏற்படுத்த விரும்பவில்லை” என்று பேசியுள்ளார்.