பாலிவுட்டின் பிரபலமான நடிகைகளில்  ஒருவர் கங்கனா ரணாவத். இவர் தமிழில் தாம் தூம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான தலைவி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தேசிய விருது, பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் கங்கனா பாஜகவின் ஆதரவாளரும்கூட.


இந்த சூழலில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்கனா ரணாவத், "உண்மையிலேயே 2014ஆம் ஆண்டுதான் இந்தியா சுதந்திரம் அடைந்தது. 194ல் கிடைத்தது சுதந்திரம் அல்ல. அது பிச்சை. பிச்சையாகக் கிடைத்ததை நாம் சுதந்திரமாக ஏற்க முடியுமா?" என்று பேசினார். இந்தப் பேச்சை கண்டித்து கங்கானவை தேசத் துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என்றும், அவருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற வேண்டும் என்றும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.


 






அதுமட்டுமின்றி, "கங்கனா ரனாவத்துக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதுபோன்ற விருதுகளை வழங்குவதற்கு முன், எதிர்காலத்தில் இதுபோன்ற நபர்கள் தேசத்தையும் அதன் ஹீரோக்களையும் அவமதிக்காத வகையில் மன உளவியல் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்" என்று காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ள நிலையில், கங்கனா மீது ஆம் ஆத்மி கட்சி வழக்கு பதிவு செய்யுமாறு மும்பை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.


இந்நிலையில் கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,   “நான் அன்று பேசிய நிகழ்விலேயே அனைத்தையும் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன். சுபாஷ் சந்திரபோஸ், ராணி லக்‌ஷ்மிபாய் மற்றும் வீர் சாவர்க்கர் போன்ற தலைவர்களின் தியாகத்துடன், 1857ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கான முதல் கூட்டுப் போராட்டம் பற்றியும் அந்த நேர்காணலில் குறிப்பிட்டு இருக்கிறேன்.




1857 போராட்டம் பற்றி எனக்கு தெரியும். ஆனால் 1947-ல் எந்தப் போர் நடைபெற்றது. 1947-ல் யாராவது எனக்கு அப்படி ஒன்று நடந்ததாக தெரியப்படுத்தினால், விழிப்புணர்வை ஏற்படுத்தினால், நான் எனது பத்மஸ்ரீ விருதை திருப்பி கொடுத்துவிட்டு மன்னிப்பு கேட்கிறேன்.


நான் மட்டும் காங்கிரஸை பிச்சைக்காரன் என்று சொல்லவில்லை" என்று கூறி காங்கிரஸை "பிச்சைக்காரன்" என்று அழைத்தது தொடர்பாக ஒரு வரலாற்று புத்தகத்தின் கருத்துகளை மேற்கோள் காட்டியிருந்தார்.




மேலும், ``சுதந்திரப் போராட்ட வீராங்கனை ராணி லக்‌ஷ்மி பாய் வாழ்க்கைப் படமான மணிகர்னிகாவில் நடிக்கும்போது 1857-ஆம் ஆண்டு போராட்டத்தைப் பற்றி விரிவான ஆராய்ச்சி செய்தேன். இந்தியாவில் வலதுசாரிகளால் தேசியவாதம் வளர்ந்தது என்பதை மறுத்தால் காந்தி ஏன் பகத்சிங்கை இறக்க அனுமதித்தார், ஏன் நேதாஜி கொல்லப்பட்டார், ஏன் வெள்ளைக்காரர்களால் இந்தியா இரு நாடுகளாக பிரிக்கப்பட்டு பிரிவினைக் கோடு வரையப்பட்டது, சுதந்திரத்தைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, இந்தியர்கள் ஒருவரையொருவர் ஏன் கொன்றார்கள் என்பதை எனக்கு புரிய வையுங்கள்.




என்னைப் பொறுத்தவரை நேதாஜி தலைமையிலான ஐஎன்ஏ-வின் சிறு கலகத்தால்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். அதன்பிறகு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிரதமராக இருந்திருக்கலாம்" என்று பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண