கேரளாவில் நடக்கும் வரதட்சனை தொடர்பான மரணங்களை உலகயே திரும்பிப் பார்க்கச் செய்தது அந்த மாநிலத்தின் விஸ்மயாவின் மரணம். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி அதிகாலையில் அவரது மாமியார் வீட்டில் இறந்து கிடந்த 22 வயது பெண் விஸ்மயாவுக்குச்  சொந்தமானதாகக் கூறப்படும் ஆடியோ தற்போது அந்த மாநிலத்தில் வைரலாகி வருகிறது. அவர் தனது கணவரால் கடுமையான சித்திரவதைக்கு ஆளானதை அந்த ஆடியோ வெளிப்படுத்துகிறது.  விஸ்மயாவுக்கும் அவரது தந்தைக்கும் இடையே நடந்த அலைபேசி உரையாடலின் ஆடியோ, அதில் விஸ்மயா அழுது புலம்புவது கேட்பவர்களை பதபதைக்க வைப்பதாக உள்ளது. மேலும் அவரது மரணம் தொடர்பான வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பளிப்பதற்கு ஒருநாள் முன்னதாக இந்த ஆடியோ உலா வருவது குறிப்பிடத்தக்கது. 


“என்னை இங்கே வாழ வைத்தால், நீங்கள் என்னை மீண்டும் பார்க்க மாட்டீர்கள். நான் ஏதாவது செய்துகொள்வேன், இங்கே இவர் செய்வதை என்னால் தாங்க முடியாது. அச்சா (அப்பா), நான் திரும்பி வர விரும்புகிறேன். எனக்கு பயமாக இருக்கிறது ”என்று விஸ்மயா கண்ணீருடன் சொல்வது கேட்கிறது.அதற்கு அவர் தந்தை ஆறுதல் கூறினாலும், விஸ்மயா தான் பயத்தில் இருப்பதாக கூறி ஆடியோவில் அழுகிறார்


முன்னதாக, செங்கொடி ஏந்திய பெண்களை முன்னத்தி ஏராகக் கொண்டு முற்போக்கு அரசாங்கத்தை நடத்திவரும் கேரளாவின் பினராயி விஜயன் ஆட்சியில் வரதட்சணைக் கொடுமையால் பெண் ஒருவர் மரணம் அடைந்தார் என்ற செய்தி இப்போது வரை ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. ஆயூர்வேத மருத்துவத்துக்குப் படித்து வந்த 22 வயது விஸ்மயாவை அவரது குடும்பம் இரண்டு வருடத்துக்கு முன்பு கோட்டயத்தைச் சேர்ந்த கிரண் என்பவருக்குத் திருமணம் செய்து வைத்தது. தனது பெண் கணவன் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காக நூறு சவரன் நகை, ஒரு ஏக்கர் நிலம், 9 லட்சத்துக்குக் கார் என வரதட்சணையை வாரி இறைத்திருக்கிறது குடும்பம். இத்தனைக் கொடுத்தும் விஸ்மயா அந்த வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கவில்லை. கிரண் விஸ்மயாவை அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார்.  திருமணமான ஆறு மாதத்திலேயே தன் பெற்றோர் வீட்டுக்குத் திரும்பிவிட்டார் விஸ்மயா. ஆனால் எப்படியோ சமாதானம் செய்து அவரைத் தன் வீட்டுக்கு மீண்டும் அழைத்துச் சென்றிருக்கிறார் கிரண். கிரண் அழைத்துச் சென்ற பிறகு தன் பெற்றோரிடம் பேசுவதையே முற்றிலுமாகத் தவிர்த்திருக்கிறார் விஸ்மயா. அதிகபட்சமாகத் தனது அம்மாவுடன் மட்டுமே அவரது உரையாடல் இருந்திருக்கிறது.


இதற்கிடையேதான் கிரண் தன்னை அடித்துத் துன்புறுத்திய புகைப்படங்களை தனது சகோதரருக்கு அனுப்பியிருக்கிறார் விஸ்மயா. வரதட்சணையாக அளித்த கார் வேண்டாம் அதற்கு பதிலாகப் பெற்றோரிடம் பணமாக வாங்கிவரும்படி விஸ்மயாவை வற்புறுத்தியிருக்கிறார் கிரண். முடியாது எனச் சொல்லவும் அடித்துக் கொடுமைப் படுத்தியிருக்கிறார். காரில் இந்தச் சண்டை நிகழ்ந்திருக்கிறது. விஸ்மயா காரை விட்டு வெளியேற முயற்சிசெய்ய அவரை முடியை பிடித்து இழுத்துக் கொடுமை செய்ததாகத் தனது சகோதரருக்கு அனுப்பியிருக்கும் வாட்சப் சாட்டில் சொல்லியிருக்கிறார். 


இந்தச் சம்பவம் நடந்த இரண்டு நாட்களில்தான்  தனது கணவர் வீட்டில் பிணமாகக் கிடந்திருக்கிறார் விஸ்மயா. கொலையா தற்கொலையா என்கிற காரணம் தெரியவில்லை என்றாலும் இது வரதட்சணைக் கொடுமையால் நிகழ்ந்த மரணம். கேரள மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில்தான் உயர்நீதிமன்றம் தற்போது தீர்ப்பளிக்க உள்ளது.