கல்வி நிலையங்களை மீண்டும் திறக்குமாறும் அனைத்து மாணவர்களும் காவித் துண்டுகள், ஷால்கள், ஹிஜாப் மற்றும் பிற மதச் சின்னங்களை வகுப்புக்குள் அணிந்து வருவதைத் தடுக்க வேண்டும் என்றும் கர்நாடக உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.


கர்நாடக மாநிலத்தின் உடுப்பி பகுதியில் முஸ்லிம் மாணவிகள் அரசு மகளிர் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. உடுப்பி, குந்தாப்பூர் பியுசி கல்லூரியில் முஸ்லிம் மாணவிகளுக்கு, வளாகத்துக்குள் ஹிஜாப் அணிந்து வரக் கடந்த அவரம் அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து மாணவிகள் வாயிற்கதவுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். 


இதைத் தொடர்ந்து கல்லூரிகளில் மத ரீதியான அடையாளத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றுகூறி பந்தார்கர் கல்லூரி ஆண் மாணவர்கள், இந்துத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் கழுத்தில் காவி நிறத் துண்டை அணிந்து வந்தனர். இதற்கிடையே பிப்.5 அன்று இந்து மாணவிகளும் கழுத்தில் காவி வண்ணத் துண்டை அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனால் இரண்டு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.


இந்நிலையில் பிப்.7 அன்று கல்லூரி வளாகத்துக்குள் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர அனுமதி அளிக்கப்பட்டது. அதேநேரத்தில் அவர்கள் தனியாக வேறொரு வகுப்பில் அமர வைக்கப்பட்டனர். அவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்படவில்லை.




இதுகுறித்து முஸ்லிம் மாணவிகள் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு பிப்.8 அன்று தனி நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த வழக்கறிஞர் தேவ்தத் காமத், ஹிஜாப் அணியும் மாணவிகள் தரப்பில் இருந்து வாதாடினார். அவர், ''முஸ்லிம் கலாச்சாரத்தில், பெண்கள் தலையில் ஹிஜாப் அணிவது அடிப்படையான ஒன்று'' என்று தெரிவித்தார்.  


அரசுத் தரப்பில் வாதாடிய அட்வகேட் ஜெனரல் , ''கல்லூரி சீருடைகளைத் தீர்மானித்துக் கொள்ளும் முழு சுதந்திரத்தைக் கல்லூரிகளுக்குக் கொடுத்துவிட்டோம். விதிமுறைகளில் தளர்வு தேவைப்படும் மாணவர்கள், கல்லூரி வளர்ச்சிக் குழுவை அணுகலாம்'' என்று தெரிவித்தார்.


இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்ற நீதிபதி தீட்சித், அடுத்த நாள் மீண்டும் விசாரிக்கப்படும்  என்று வழக்கை ஒத்திவைத்தார். அடுத்த நாள் விசாரித்தவர் ஜிஹாப் விவகாரம் தேசிய அளவிலான பேசுபொருளாக மாறியுள்ளதால், வழக்கைக் கூடுதல் அமர்வுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார்.




இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம், கர்நாடகாவில் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தேசிய அளவில் இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம்.  உரிய நேரத்தில் விசாரிப்போம் எனத் தெரிவித்தது.


இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் கர்நாடக உயர் நீதிமன்றம் கல்வி நிறுவனங்களை மீண்டும் திறக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. எனினும் அனைத்து மாணவர்களும் காவித் துண்டுகள், ஷால்கள், ஹிஜாப் மற்றும் பிற மதச் சின்னங்களை வகுப்புக்குள் அணிந்து வருவதைத் தடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.